
விருதுநகரில் 8 பேரால் வீடியோ மிரட்டல் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண் வழக்கில் கைதான ஹரிஹரன், ஜூனைத் அகமது, பிரவீன் மற்றும் மாடசாமி ஆகிய 4 பேரை, 7 நாட்கள் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மதுரை மத்திய சிறையில் மேற்கண்ட 4 பேரும் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்தில் வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பள்ளி மாணவர்களும் அடைக்கப்பட்ட நிலையில், அந்தப் பெண்ணிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார், கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினார்கள். கைதானவர்களின் வீடுகளிலும் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ஹரிஹரன், ஜுனைத் அகமது உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்துவதற்காக அவர்களில் சிலரது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தி.மு.க. இளைஞரணியைச் சேர்ந்த ஹரிஹரன், அக்கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட ஜுனைத் அகமது, பிரவீன் மற்றும் மாடசாமி ஆகிய நால்வரும் முழுவதுமாக முகம் மறைக்கப்பட்ட நிலையில் விருதுநகரிலுள்ள குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

போலீஸ் காவலில் ஏழு நாட்கள் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதியளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம், ஏப்ரல் 4- ஆம் தேதி மீண்டும் அவர்களை ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.