![vilupuram youngster marudupandiyan passed away](http://image.nakkheeran.in/cdn/farfuture/JjBwFrl_4960DB-smWR7Z-uw2rbJiN92u2gcxWfypaQ/1660135651/sites/default/files/inline-images/39_24.jpg)
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகில் ஈ. மண்டகமேடு கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் மருதுபாண்டியன்(22) பி.எஸ்சி படித்து வருகிறார். இவருக்கும் இவரது உறவினர் பெண்ணுக்கும் வரும் 28 ஆம் தேதி திருமணம் செய்ய போவதாக இருதரப்பு பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் மருதுபாண்டியன் நேற்று மதியம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மருதுபாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ
மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து மருதுபாண்டியனின் செல்போனை ஆய்வு செய்த போலீசார் அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது மொபைல் போனில் ஒரு ஆடியோ பேசி வைத்துள்ளதை கண்டறிந்துள்ளனர். அந்த ஆடியோவில், மாமா உமக்கும் உமது மனைவிக்கும் விருப்பப்பட்டு இருவரும் சேர்ந்துதான் எனக்கு பெண் கொடுப்பதாக நினைத்து நான் உமது மகளை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன் ஆனால் எனக்கு பெண் கொடுப்பதில் உமது மனைவிக்கு சம்மதம் இல்லை என்று தெரிய வருகிறது எனவே உங்கள் மகளை நீங்கள் நினைத்தபடி உனது மச்சானுக்கே திருமணம் செய்து கொடுத்து விடுங்கள்" என்று பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயம் பட்ட இளைஞர் திடீர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.