![Villupuram](http://image.nakkheeran.in/cdn/farfuture/d_vS9Cexa-XveZt-qnmjbNrV5w-51sDpC8ZqxHXmwGs/1592620743/sites/default/files/inline-images/630_3.jpg)
விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை அருகே உள்ளது மேல் வயலாமூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் முப்பத்திரண்டு வயது கார்த்திகேயன். இவருக்குத் திருமணமாகி சாந்தி என்ற மனைவியும், ஆறு வயதில் ஒரு மகளும், நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி இரவு சுமார் 10.30 மணி அளவில் கார்த்திகேயன் தன் மனைவி சாந்தியிடம் வீட்டை விட்டு கொஞ்ச தூரம் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் நெடுநேரமாகியும் அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. இதுகுறித்து மாமனார் குமாரிடம் கூறியுள்ளார். பதற்றமடைந்த குமார் மருமகள் சாந்தியுடன் மகன் கார்த்திகேயனை அந்த இரவு நேரத்தில் அக்கம் பக்கம் தேடிச் சென்றனர்.
ஊர் ஏரிக்கரை அருகே இருந்த ஒரு மரத்தில் கார்த்திகேயன் பிணமாகத் தொங்கியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இறந்த கார்த்திகேயன் உடலில் காயங்கள் இருந்துள்ளன. இதனால் கார்த்திகேயனை யாராவது வரவழைத்து அடித்துக் கொலைசெய்து தூக்கில் மாட்டிவிட்டுள்ளனரா? என்ற சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவலூர்பேட்டை காவல்நிலையத்தில் குமார் புகார் கொடுத்துள்ளார். போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். கார்த்திகேயன் தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அடித்துக் கொலை செய்து தூக்கு மாட்டி உள்ளனரா? இதுகுறித்து அவலூர்பேட்டை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.