Skip to main content

"எங்க முறைப்படி திருவிழா நடத்தணும்" - வெயிலில் 7 மணிநேரம் அமர்ந்த மக்கள்

Published on 20/05/2018 | Edited on 21/05/2018

 

k t

 


    கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நீதிமன்ற உத்தரவுப்படி திருவிழா நிகழ்ச்சிகள் நடத்த உரிமை வேண்டும் என்று ஒரு குடியிருப்பு மக்கள் 7 மணி நேரம் கோயில் முன்பு சுடும் வெயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். கோயில் நிர்வாகிகள், அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராம காவல் தெய்வமாக எழுந்தருளியுள்ள முத்துமாரியம்மன் கோயில் அப்பகுதியிலேயே மிகப்பெரிய பிரமாண்ட ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள கோயில். இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பூ சொறிதல், காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கி  10 நாட்கள் வரை நடத்தப்படும். அதே போல கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை பூ சொறிதல் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. ஞாயிற்றுக் கிழமை இரவு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு திருவிழா நடத்துவதற்காண ஏற்பாடுகள் நடந்து வந்தது. 

 

    இரவில் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு ஒரு குடியிருப்பு மக்கள் திடீரென கோயில் முன்பு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் எங்களுக்கு வழக்கமான முறையிலும், நீதிமன்ற உத்தரவுபடியும் திருவிழா நிகழ்ச்சிகள் நடத்த உரிமை வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு வந்த முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியன் அந்த மக்களிடம் சமாதானம் பேசி கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். ஆனால் தர்ணாவில் இருந்த மக்கள் உரிமை கிடைக்கும் வரை கோயிலுக்குள் வரமாட்டோம் என்று மீண்டும் வெளியே வந்து வெயிலில் அமர்ந்துவிட்டனர். 

 

    ஒரு குடியிருப்பு மக்கள் நீண்ட நேரமாக தர்ணாவில் ஈடுபட்டுள்ள தகவல் அறிந்து கோயில் நிர்வாகி செய்கோடன் உள்ளிட்ட கரை நிர்வாகிகள். கிராமத்தினர், வருவாய் துறை அதிகாரிகள் வட்டாட்சியர் பொருப்பு யோகேஸ்வரன், கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரெங்கராஜன், கிராம நிர்வாக அலுவலர் பொருப்பு அருள்வேந்தன், கீரமங்கலம் போலிஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்ர் பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் வழக்கமாக முறைப்படியும் நீதிமன்ற உத்தரவுப்படியும் தர்ணாவில் ஈடுபட்டுள்ள குடியிருப்பு மக்கள் மாலை 6 மணி முதல் இரவு 12 மணிக்குள் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தர்ணாவில் ஈடுபட்டிருந்த மக்கள் 7 மணி நேர போராட்டத்தை கைவிட்டனர். அதன் பிறகு காப்புக்கட்டுவதற்காண பணிகள் நடத்தப்பட்டது.
    ஆனால் இந்த சமாதான பேச்சுவார்த்தைக்கு மேலும் கரை நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

ஜாபர் சாதிக்கிற்கு நீதிமன்றக் காவல் விதிப்பு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Jaber Sadiq sentenced to court custody

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வந்தார். அதனைத் தொடர்ந்து, ஜாபர் சாதிக் மீது சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், பணப் பரிவர்த்தனைகள், வங்கிக் கணக்கு விவரங்களை மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளிடம் இருந்து டெல்லி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் தீவிரவாத அமைப்புகளுக்குச் சென்றுள்ளதா என்று விசாரிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து சென்னை பெருங்குடி அருகே ஜாபர் சாதிக் தங்கியிருந்த வாடகை வீட்டில் மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். வீட்டின் உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ஒரு பை மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய ஒரு பெட்டி கிடைத்தன. மேலும் ஜாபர் சாதிக் இல்லத்திற்கு வந்து சென்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். விசாரணைக்கு அழைக்கும் போது வாடகை வீட்டின் உரிமையாளர் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

Jaber Sadiq sentenced to court custody

இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாஃபர் சாதிக்கை என்.சி.பி. அதிகாரிகள் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரித்து வந்தனர். அதன் பின்னர் 3 நாட்கள் கூடுதலாக அனுமதி பெற்று காவலில் விசாரித்தனர். அதே சமயம் இரண்டாவது நாளான நேற்று (18.03.2024) ஜாஃபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்னை அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது ஜாஃபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் மீண்டும் ஜாஃபர் சாதிக் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், ஜாஃபர் சாதிக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் என்.சி.பி. அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது ஜாஃபர் சாதிக்கை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.