
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாவட்ட நீதிபதிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி, வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய 5 பேர் புதிய கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விக்டோரியா கவுரியின் நியமனத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. விக்டோரியா கவுரி பாஜவில் தீவிரமாக செயல்பட்டதாகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புணர்வு கருத்துகளை முன்வைத்துள்ளார் என்று கூறி விக்டோரியா கவுரியை நீதிபதியாக பரிந்துரை செய்யக்கூடாது என்று சென்னை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதப்பட்டது. இருப்பினும் அவரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து விக்டோரியா கவுரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணை தற்போது நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பீ.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய இரண்டு பேர் கொண்ட அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் அதே சமயத்தில் சென்னையில் விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டுள்ளார். அவருடன் ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி, பி.பி. பாலாஜி, கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோருக்கும் தலைமை நீதிபதி(பொறுப்பு) ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவரின் பதவியேற்பை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.