![Victim of corona suffering from unavailability of ambulance; Panchayat Secretary's humanitarian action](http://image.nakkheeran.in/cdn/farfuture/1db4DYjq0RK1W9dXbNoqvkXuBLR0Yh1BW57t_dHTRUw/1619510114/sites/default/files/inline-images/ramnad-2.jpg)
இராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்ட பெண்ணை அழைத்துச் செல்ல 2 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், கடுமையான வேதனையில் காத்திருந்தார் 35 வயதுடைய பெண்மணி. சக்கரக்கோட்டை ஊரட்சிக்குட்பட்ட பாரதி நகரைச் சேர்ந்த முருகன் என்பவரது மனைவி புனிதா (35).
இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். ஆகையால், இவர் தனது மூன்று குழந்தைகளோடு தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் (25.04.2021) புனிதாவிற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் தன்னை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர்.
ஆனால் 2 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், ஊராட்சி செயலர் விமல், உதவியாளர் ஹரி, ஊராட்சித் தலைவரின் மகன் கண்ணுக்குமார் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 2 கிலோ மீட்டர் தூரம் பயணித்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புனிதாவிற்கு டாக்டர்கள் சிறப்பு வார்டில், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து ஊராட்சி செயலர் விமல்ராஜ் கூறுகையில், “ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால், வாகன போக்குவரத்து இல்லை. மூச்சித்திணறல் ஏற்பட்ட நிலையில் என்னுடைய இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றேன்” என கூறினார்.