![tuticorin youth case: Inspector suspended](http://image.nakkheeran.in/cdn/farfuture/Fr4JJKIS5cN5bjgDySH9mjUcEhdoa0Qzvay_5_x4Hxg/1600678147/sites/default/files/inline-images/selvan-in_2.jpg)
தூத்துக்குடி தட்டார்மடம் பகுதியைச் சேர்ந்த செல்வன் குடும்பத்தினருக்கும் அந்தப் பகுதியின் உசரத்துக்குடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளரான திருமணவேலுவுக்கும் நிலம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து செல்வன், தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளார். இதேபோல் திருமணவேலுவும் புகார் செய்ததாகவும், திருமணவேலு புகாரின் அடிப்படையில் செல்வன் மற்றும் அவரது சகோதரர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தனக்கு நியாயம் வேண்டி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையிட்டிருக்கிறார் செல்வம். செப் 16 அன்று அதற்குப் பதில் மனு தாக்கல் செய்யும்படி இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணனுக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே கடந்த 17ம் தேதி செல்வம் சொக்கன் குடியிருப்பிற்கு தனது பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தபோது அவரது பைக் மீது கார் மோதியதில் அவர் கீழே விழ அவரைக் காரில் கடத்திச் சென்ற ஒரு கும்பல் உருட்டுக் கட்டைகளால் தாக்கிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே 17ம் தேதியன்று போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட செல்வத்தின் உடலை அவரது உறவினர்கள் வாங்கவில்லை. திருமணவேல், இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் இருவரையும் கைது செய்ய வேண்டும். செல்வம் மனைவி செல்வஜீவிதாவிற்கு உரிய நிவாரணம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், செல்வன் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறியதோடு அவர்களது போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
நான்காவது நாளாக இன்றும் அவர்களது போராட்டம் தொடருகிறது. இந்த வழக்கில் இன்று பிற்பகல் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி டி.ஜி.பி திரிபாதி உத்தரவு பிறப்பித்தார். இந்தநிலையில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டரை தற்போது சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவின்குமார் அபினவ் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய திருமணவேல் மற்றும் ஒருவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.