
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. அதுபோல், நேற்று மாலை திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 40 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று தஞ்சையை நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை நடராஜன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், புது கரியாப்பட்டி பிரிவு சாலை அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, கட்டளை வாய்க்கால் தடுப்பு சுவரில் மோதியுள்ளது. இதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கிப்பட்டி காவல்துறையினர் பேருந்தினுள் சிக்கியவர்களை மீட்டு காயமடைந்தவர்களை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.