Skip to main content

சூரப்பா துணைவேந்தர் பதவியில் நீடிப்பதை எதிர்த்த டிராஃபிக் ராமசாமி வழக்கு, மீண்டும் தள்ளுபடி!

Published on 30/01/2021 | Edited on 30/01/2021

 

Traffic Ramasamy case dismissal of Surappa vice-chancellor

 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் சூரப்பா நீடிப்பதை எதிர்த்து டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.

 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இந்நிலையில், சூரப்பா அப்பதவியில் நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து, டிராஃபிக் ராமசாமி கடந்த மாதம் பொதுநல மனுதாக்கல் செய்திருந்தார். அதில், ‘பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, ஒருவரை இரு முறைக்கு மேல் துணைவேந்தராக நியமிக்க முடியாது. சூரப்பா, கடந்த 2009 முதல் 2015 வரையிலான ஆறு ஆண்டுகள் பஞ்சாப் மாநிலம் ரோபரில் உள்ள ஐ.ஐ.டி-யில் இயக்குனராக பதவி வகித்துள்ளார். 2016 -2017ல் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் டீன் பதவியையும் வகித்துள்ளார். ஐ.ஐ.டி. இயக்குனர் பதவி என்பது துணைவேந்தர் பதவிக்கு நிகரானது. அந்த அடிப்படையில், ஏற்கனவே இரண்டுமுறை பதவி வகித்துள்ள அவரை, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்துள்ளது, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு விரோதமானது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஐஐடி இயக்குனர் மற்றும் இந்திய அறிவியல் கல்வி நிறுவன டீன் பதவிகள், துணைவேந்தர் பதவிகளுக்கு இணையானது என்பதற்கான எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

இந்நிலையில், டிராஃபிக் ராமசாமி, புதிதாக கூடுதல் ஆவணங்களுடன் இதே கோரிக்கைக்காக பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, இந்த வழக்கில் பொதுநலம் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், அரசு பதவி வகிப்பவர்களுக்கு எதிராக கோ வாரண்டோ மனுவைத்தான் தாக்கல் செய்ய முடியும் எனவும் கூறி, டிராஃபிக் ராமசாமியின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

சார்ந்த செய்திகள்