Skip to main content

“போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு” - தமிழக அரசு அறிவிப்பு!

Published on 08/09/2024 | Edited on 08/09/2024
TN Govt Announcement forFree Coaching Course for Competitive Exams 

டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி. போன்ற போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் பயிற்சித் துறை தலைவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “டி.என்.பி.எஸ்.சி. (TNPSC), எஸ்.எஸ்.சி. (SSC), ஐ.பி.பி.எஸ். (IBPS), ஆர்.ஆர்.பி (RRB) ஆகிய தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும் மற்றும் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி வகுப்புகளுக்கு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, புதிதாகச் சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01-01-2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.

இந்த பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தின் www.cecc.in என்ற இணையதளம் வாயிலாக 10.09.2024 முதல் 24.09.2024 வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை இணையதள முகவரியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 25954905 மற்றும் 044 28510537 ஆகிய தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தெரிவு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்