சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சொந்த ஊருக்கு திரும்பிய இளைஞர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த சோத்திரியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. இவரது மகன் அசோக்குமார் (33) சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் உணவகம் ஒன்றில் சமையலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 31- ஆம் தேதி சென்னை விமான நிலையம் வழியாக ஊர் திரும்பினார்.
![tiruvarur youngster coronavirus hospital admit](http://image.nakkheeran.in/cdn/farfuture/0lrk-JO6Cs3hCtpTe1H2Rb2Qeat1yoXLtCi59IuqkhA/1580813029/sites/default/files/inline-images/hospital444.jpg)
இந்த நிலையில் அசோக்குமாருக்கு திடீரென ஏற்பட்ட சளி, காய்ச்சல் தொந்தரவு காரணமாக அருகே உள்ள ராயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் மேல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிறகு அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அசோக்குமார் சீனாவில் இருந்து வந்திருப்பதால் சந்தேகத்தின் பேரில் அவரை தனி வார்டில் அனுமதித்து, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.