பிரபல திருத்தலமான அறுபடை வீடுகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர், ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா தொடங்கியது. அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை 3 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 9 மணியாவில் சுவாமி ஜெயந்தி நாதர் யாக சாலைக்கு எழுந்தருளினார். ஆலயத்தின் 2ம் பிரகார மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் மகா சங்கல்ப பூஜையைத் தொடர்ந்து யாக சாலை பூஜைகளை ஆனந்த் விஸ்வநாத பட்டர் தொடங்கி வைத்தார். பின்னர் யாக சாலையில் ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் ஆலய செயல் அலுவலர் அம்ரீத் உதவி ஆணையர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

கந்த சஷ்டி விழா தொடங்கியதையடுத்து பக்தர்கள் ஏராளமானோர் அதிகாலை கடலில் நீராடி கோயில் பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தனர். கந்த சஷ்டிக்காக தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயம் வந்து விரதம் தொடங்குவர்.
இந்த ஆண்டு விழாவின் உச்ச நிகழ்ச்சியான சூரசம்ஹார வதம் நவ 2ம் தேதி மாலை கடற்கரையில் நடக்கிறது.