Skip to main content

எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்!

Published on 30/03/2025 | Edited on 30/03/2025

 

LPG tanker truck owners struggle called off

தென் மண்டல எல்.பி.ஜி. டேங்க் லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழகத்தில் நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் இணைந்துள்ளனர். மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் இருந்து எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு எரிவாயுவை டேங்கர் மூலம் வாடகை ஒப்பந்தம் அடிப்படையில் இயக்கி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க லாரிகள் எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் முன்பு வேலை நிறுத்தத்தைத் தொடங்க அறிவித்திருந்தது.

2025ஆம் ஆண்டு முதல் 2030ஆம் ஆண்டுகளுக்கான புதிய வாடகை ஒப்பந்த விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்டு இருந்தது. அதில் எல்.பி.ஜி. லாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அந்த விதிமுறைகளைத் தளர்த்தக் கோரி மூன்று கட்டங்களாக எல்பிஜி டேங்கர் லாரிகள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாததால் கடந்த 27ஆம் தேதி (27.03.2025) காலை 6 மணி முதல் தென் மண்டல அளவில் எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர்.

அதே சமயம் 27ஆம் தேதி மாலை கோவையில் ஐ.ஓ.சி., பி.பி.சி., எச்.பி.சி.எல். உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதன் காரணமாகத் தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அச்சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன் அறிவித்திருந்தார். மேலும் இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை என அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தென் மாநிலங்கள் முழுவதும் கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த எல்.பி.ஜி. டேங்கர் லாரி வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தென் மண்டல எல்.பி.ஜி. டேங்க் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் இன்று (30.03.2025) நடைபெற்றது. அப்போது டேங்க் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளது. இதன் காரணமாக டேங்க் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக இன்றைய கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்க் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்