போடி அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 11- ஆம் தேதி போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் நடைப்பயிற்சிக்கு வந்த 45 சுற்றுலாப் பயணிகள் திடீரென வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீயில் சிக்கியனர். இதில் சுற்றுலாப் பயணிகளில் 23 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் தமிழக அரசு குரங்கணி வனப்பகுதியில் நடைப்பயிற்சி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்தது.
![theni forest area incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/FGaoI-B7odg1cuqZDWE4ppTt8eOmxsRDqYt9yklCNYs/1585106598/sites/default/files/inline-images/thini%20incident.jpg)
இந்த நிலையில்தான் தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிங்கபுரத்தில் குடியிருக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கேரளா பேத் தொட்டிக்கு கூலி வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது பஸ் போக்குவரத்து இல்லாததால் அங்கிருந்து சாந்தம் பாறை வனப்பகுதியில் ஒத்தையடிப்பாதை வழியாக ராசிங்கபுரத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென பரவிய காட்டுத்தீயால் அந்த ஒன்பது பேருமே சிக்கி தவித்தனர்.
இதில் விஜயமணி (45), கீர்த்திகா (3) ஜெய ஸ்ரீ உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காட்டுத் தீ பரவிய விஷயம் வனப்பகுதியில் உள்ள கீழ் வசிக்கும் மக்களுக்கு தெரியவே உடனே சம்பவ பகுதிக்கு விரைந்த மக்கள் தீக்காயங்களுடன் உயிர் தப்பிய 6 பேரையும் மீட்டு தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில். இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மற்ற நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.