![Thefts that take place in the same shop](http://image.nakkheeran.in/cdn/farfuture/QRQAknFGHNVlmculzCy3Zy355o2gLe9cS6mcUxLubO8/1628752752/sites/default/files/inline-images/th-1_1519.jpg)
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சி மாந்துறை மெயின் ரோட்டில் ‘சகாயம் உரக்கடை’ எனும் கடை செயல்பட்டுவருகிறது. இந்த உரக்கடையை நகர் கிராமத்தைச் சேர்ந்த சகாயம் மகன் ஜான், பல ஆண்டுகளாக நடத்திவருகிறார்.
இந்நிலையில், நேற்று (11.08.2021) இரவு மர்ம நபர் ஒருவர், அந்தக் கடையின் கேட்டுப் பூட்டை உடைத்து கடையின் உள்ளே சென்று, கல்லாவின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அதில் சில்லரை காசுகள் மட்டுமே இருந்ததால் ஏமாற்றமடைந்து அங்குள்ள கம்பியில் கடையின் பூட்டைத் தொங்க விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இன்று காலை வழக்கம்போல் கடையைத் திறக்கவந்த ஜான், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் லால்குடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, கடையிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான கொள்ளையனின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.
மேலும் இந்த உரக்கடையில், இதற்கு முன் மூன்றுமுறை இதேபோன்ற திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. முதல்முறை ரூ. 13,000, இரண்டாவது முறை ரூ. 27,000, மூன்றாவதுமுறை ரூ. 7000 ரூபாய் என பணம் திருடுபோயுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்தமுறை கல்லாவில் பணம் இல்லாததால் கொள்ளை முயற்சி தோல்வியடைந்தது.