
10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் மற்றும் அவரது ஓட்டுநர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகாவுக்கு உட்பட்ட சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரின் தந்தை இறந்த நிலையில், வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார். வாரிசு சான்றிதழ் பெற அரவக்குறிச்சி வட்டாட்சியர் ராஜசேகரன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனிசாமி, கரூர் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர்கள் கொடுத்த திட்டத்தின்படி பழனிசாமி தாசில்தார் ராஜசேகரனிடம் லஞ்ச பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி நடராஜ் தலைமையிலான போலீசார் தாசில்தார் ராஜசேகரனை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது வாகன ஓட்டுநர் சுரேந்திரன் என்பவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இருவரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.