![tamilnadu rains regional meteorological centre in chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/3F5LCizNqgyFAQp2txyVeuzxqKwGzo0yl3Bzjo5vBMQ/1603013406/sites/default/files/inline-images/chennai_rain_03%20%281%29.jpg)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெருங்களூர் (புதுக்கோட்டை), வல்லம் (தஞ்சாவூர்) தலா 13 செ.மீ., கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை)- 11 செ.மீ., தஞ்சாவூர்- 9 செ.மீ., காரியாபட்டி (விருதுநகர்), சமயபுரம் (திருச்சி)- 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான், ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.