Skip to main content

'டீ கடைகளை திறக்கலாம்'- தமிழக அரசின் புதிய அறிவிப்பு!

Published on 09/05/2020 | Edited on 10/05/2020

 

tamilnadu lockdown tn government new announcement

கரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர தமிழகம் முழுவதும் காலை 06.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை டீ கடை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் கரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 24/03/2020 முதல் அமலில் இருந்து வருகின்றது. கடந்த 02/05/2020 அன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின்படியும், பெருநகர சென்னை காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. 

 

 


அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) கீழ்க்காணும் பணிகள், 11/05/2020 திங்கள்கிழமை முதல் குறிப்பிடப்பட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. 

 

tamilnadu lockdown tn government new announcement


1. அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 06.00 மணிமுதல் இரவு 07.00 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் (All Standalone and Neighbourhood Shops) காலை 10.30 மணி முதல் மாலை 06.00 மணிவரை செயல்படும். 


2. அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளை தவிர்த்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 06.00 மணிமுதல் இரவு 07.00 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் (All Standalone and Neighbourhood Shops) காலை 10.00 மணி முதல் இரவு 07.00 மணிவரை செயல்படும். 

 

 


3. சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) தேநீர்கடைகள் (Tea Shops) பார்சல் சேவைக்கு மட்டும், காலை 06.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. தேநீர் கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் தினமும், 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கடையில் வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ, ஏதும் உட்கொள்ள அனுமதி இல்லை. இதை முறையாக கடைபிடிக்க தவறும் தேநீர் கடைகள் உடனடியாக மூடப்படும். 

 

tamilnadu lockdown tn government new announcement


4. பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 06.00 மணிமுதல் மாலை 06.00 மணிவரை செயல்படும். 

5. பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காலை 06.00 மணிமுதல் இரவு 08.00 மணிவரை செயல்படும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பம்புகள் 24 மணிநேரமும் செயல்படும். 


6. பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை செயல்படும். சென்னையை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், அனைத்து தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் காலை 10.00 மணி முதல் இரவு 07.00 மணிவரை செயல்படும். 

 

tamilnadu lockdown tn government new announcement

அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதையும், போதுமான கிருமிநாசினியை பயன்படுத்தி பணிபுரிவதையும், பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (Standard Operation Procedures) தீவிரமாக கடைப்பிடிப்பதையும், கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையாளர்களும், காவல்துறையினரும் அறிவுறுத்தப்படுகிறார்கள். 

அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து முழுமையாக கடைபிடிக்கப்படும்". இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்