![Tamil Nadu Police New Scheme for Women Safety](http://image.nakkheeran.in/cdn/farfuture/g8bk6a_j1vvDG0r871AyjGxBkRY53AEopiXYyGjmUeo/1687316771/sites/default/files/inline-images/23_73.jpg)
‘பெண்கள் பாதுகாப்புத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையில் பெண்களின் பாதுகாப்புக்காக காவல் செயலி திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இரவு நேரங்களில் தனியாகப் பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக, 'பெண்கள் பாதுகாப்பு திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு காவல்துறை. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாகச் செல்லும் பெண்கள் பாதுகாப்பு தேவை எனக் கருதினால் காவல்துறையின் உதவி எண்களை அழைக்கலாம் என இத்திட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாகப் பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், 1091, 112, 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால், அவர்கள் இருக்கும் இடங்களுக்கே காவல்துறை ரோந்து வாகனங்கள் வந்து அழைத்துச் செல்லும். அனைத்து நாட்களிலும் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.