![Tamil Nadu Chief Minister's letter to the Union Foreign Minister!](http://image.nakkheeran.in/cdn/farfuture/3f0WdvvnhJHgczOEHHaJ114ylHdh-n1T9L_yun-kP44/1634750387/sites/default/files/inline-images/cm3333%20%281%29_2.jpg)
மீனவர்கள் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20/10/2021) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இலங்கைக் கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவக் கப்பலை விரட்டி பிடிக்க முயற்சித்த போது மூழ்கிப்போன கப்பலில் காணாமல் போன மீனவரைக் கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (20/10/2021) கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கடந்த 18/10/2021 அன்று மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் துரத்தியபோது மூழ்கியதாகவும், அதிலிருந்த மூன்று மீனவர்களில் இரண்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒரு மீனவரை தேடும்பணி 18/10/2021 முதல் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மீட்கப்பட்ட இரண்டு மீனவர்களுக்கு மறுவாழ்வு அளித்திடவும், காணாமல் போன மீனவரைக் கண்டுபிடித்திடவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், தனது கடிதத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நீண்ட காலமாகத் தொடர்ந்து நிகழ்ந்து வருவதால், இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வெளியுறவுத்துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.