அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை தொடர்ந்த மேல்முறையிட்டு வழக்கில், ராதாபுரம் தொகுதி தேர்தல் வாக்குகளின் மறு எண்ணிக்கைக்கு தடை இல்லை; அதே நேரத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவை வெளியிட தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். நீதிபதி அருண்மிஷ்ரா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் அப்பாவு இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் வாக்குகள் மறு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.
இன்பதுரை

மறு எண்ணிக்கைக்கு தடை கோரி, இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வாக்குக்களின் மறு எண்ணிக்கை தனக்கு சாதகமாக அமையும் என்ற நம்பிக்கை இல்லாததால் மேல்முறையீடு செய்கிறார் என்று கூறப்பட்டது.
அப்பாவு

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வரும் வரை மறு எண்ணிக்கைக்கு தடை கேட்டும், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் இன்பதுரை. இதையடுத்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன வந்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன். அதுவரை வாக்குகளை மறு எண்ணிக்கை செய்வதில் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்று மறு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டார் ஐகோர்ட் நீதிபதி.
இதையடுத்து இன்று மறு வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக துவங்கி, நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்பதுரை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், ராதாபுரம் தொகுதி தேர்தல் வாக்குகளின் மறு எண்ணிக்கைக்கு தடை இல்லை; அதே நேரத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவை வெளியிட தடை விதிக்கப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இன்பதுரை மனு மீதான மறு விசாரணையை வரும் அக்டோபர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்ற நீதிபதி அருண்மிஷ்ரா தலைமையிலான அமர்வு, அதுவரை மறு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை விதித்துள்ளது.