அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
கரோனா காலத்தில் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிப்பு பதாகைகளை கையில் ஏந்தி நன்றி தெரிவித்தனர். மேலும் தமிழக அரசு 80 மதிப்பெண் அரையாண்டு மதிப்பெண் அடிப்படையிலும், 20 சதவீத மதிப்பெண் வருகைப்பதிவு அடிப்படையிலும் வழங்கி அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் பெற்றோர்கள் கூறுகையில், பல நாட்களாக தூக்கம் வராமல் தவித்தோம் எங்களது பிள்ளைகள் எப்படி தேர்வு எழுத போகிறதோ என்ற பல நாள் கேள்விக்கு தமிழக அரசு விடை கொடுத்து எங்கள் வயிற்றில் பாலை வார்த்து விட்டது என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் இன்று தேர்வு நுழைவுச்சீட்டு வாங்க காத்திருந்த மாணவர்கள் இன்ப அதிர்ச்சியில் மகிழ்ந்தது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.