
கிராமத்தில் எழுதிப் படிக்க தெரியாத 5 பேருக்கு எழுதப்படிக்க சொல்லித் தருவேன் என்று அப்துல் கலாம் நினைவு தினத்தில் உருவம்பட்டி அரசுப்பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்..
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி அரசுப் தொடக்கப்பள்ளியில் முன்னால் குடியரசுத் தலைவர் கனவு நாயகன் அப்துல்கலாமின் நினைவு தின உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளித்தலைமை ஆசிரியை ஜெ.சாந்தி மாணவர்களிடம் பேசும் போது..
மாணவர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையின் இலட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும் என அப்துல்கலாம் அவரது புத்தகத்தில் 10 கட்டளைகளை எழுதியுள்ளார். எனவே மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் அவரது 10 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் இளம் வயதிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டால் இந்தியாவை வளர்ந்த நாடாக்க உங்களால் முடியும் என்றார்.
பின்னர் மாணவர்கள் அனைவரும் எங்கள் கிராமங்களில் எழுதப்படிக்கத் தெரியாத 5 பேருக்கு எழுதப் படிக்க சொல்லித் தருவேன். வீட்டிலோ, பள்ளியிலோ 5 மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து பராமரிப்பேன். நான் என் வாழ்நாளில் நேர்மையாக நடந்து கொண்டு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்க முயல்வேன் என்பன போன்ற பத்து கட்டளைகளை கூறி அப்துல்கலாமின் புகைப்படம் முன் நின்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்..
முன்னதாக மாணவர்கள் அனைவரும் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் முனியசாமி செய்திருந்தார்.