Skip to main content

ஒரே ஆண்டில் ரூ.9 கோடி மதிப்பிலான கடத்தல் ரேஷன் பொருட்கள் பறிமுதல்! 

Published on 08/02/2025 | Edited on 08/02/2025
Smuggling of ration items worth Rs. 9 crore seized in a single year

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் அரிசி, பருப்பு மண்ணெண்ணை உள்ளிட்ட பொருட்கள் தமிழக அரசு சார்பில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இவ்வாறு மலிவு விலையில் வழங்கப்படும் அரிசி, மண்ணெண்ணை உள்ளிட்ட பொருட்களை சிலர் சட்டவிரோதமாக மற்ற மாநிலங்களுக்கு கடத்தி செல்லும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனை தடுக்கும் பணியில் சிவில் சப்ளை குற்ற புலனாய்வு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் கடத்தப்பட்ட அரசி மண்ணெண்ணை உள்ளிட்ட பொருட்களை நாள்தோறும் பறிமுதல் செய்து வருகின்றனர். 

கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான கடத்தல் ரேசன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிவில் சப்ளை குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகம் முழுவதும் கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் ரேசன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக 11085 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக சுமார் 9 கோடி மதிப்புள்ள 33980 குவிண்டால் ரேசன் அரிசியும், 18898 லிட்டர் மண்ணெண்ணையும், 1984 கியாஸ் சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் ரேசன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக 11571 நபர்கள் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய சுமார் 2012 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 89 பேருக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.  ரேசன் பொருட்கள் கடத்தல் சம்பவங்களை தடுப்பது தொடர்பாக இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் 41 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.  மேலும் ரேசன் அரசி பொருட்கள் கடத்தல் தொடர்பாக 18005995950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும், 9677736557 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்