கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை தவிர மற்றவைகளுக்காக வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரையில் மட்டுமே பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளிமாநில வாகனங்கள் புதுச்சேரிக்கு நுழை தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்ததையடுத்து இன்று காலை 7 மணி முதல் புதுச்சேரி எல்லைகளான கடலூர் மாவட்ட எல்லை கண்ணியகோயில், விழுப்புரம் மாவட்ட எல்லைகள் மதகடிப்பட்டு, கோரிமேடு, அனுமந்தை ஆகிய பகுதிகளில் சீல் வைக்கப்பட்டு வெளிமாநில கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
![Puducherry](http://image.nakkheeran.in/cdn/farfuture/5icYoUEVI4i8c4N6tMjaV1srESBbvVzM5HO_rEAnt-k/1584965858/sites/default/files/inline-images/pp21.jpg)
தமிழகம், புதுவை பதிவெண் கொண்ட வாகனங்கள் தவிர வேறு மாநில பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதேசமயம் கடலூர் பகுதியிலிருந்து சென்னை செல்லும் பேருந்துகள் விழுப்புரம் வழியாக இயக்கப்படுகின்றன.
மருத்துவம், இறப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் வாகனங்கள் சோதனை செய்து, கிருமி நாசினி தெளித்த பின்பே மாநில எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல் புதுச்சேரி பேருந்துகள் அம் மாநிலத்துக்குள் மட்டுமே செல்கின்றன. அதேசமயம் பாதியளவு பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. இருந்த போதிலும் பேருந்துகளில் இடைவெளி விட்டு அமருமாறு நடத்துனர்கள் மற்றும் காவல்துறை மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
இதனிடையே மாவட்ட ஆட்சியர் அருண், ‘மாநில எல்லைக்குள் வரும் வாகனங்கள் பரிசோதனைக்கு பின்பு அனுப்பப்பட்டு வருவதாகவும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தபோதும் அத்தியாவசியமான பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா’கவும் தெரிவித்தார்.