Skip to main content

செயல்படத் துவங்கிய மாட்டுச் சந்தை... வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தம்!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

Sales sluggish due to non-arrival of other state traders

 

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையன்று ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே கூடும் மாட்டுச் சந்தை மிகவும் பிரபலமானது. இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புறப் பகுதியான நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களிலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் தங்களது மாடுகளை விற்பனைக்குக் கொண்டு வருவார்கள். இங்கு விற்பனைக்கு வருகிற மாடுகளைத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலுள்ள மாட்டு வியாபாரிகள் அதிகளவில் நேரில் வந்து வாங்கி செல்வது வழக்கம்.

 

கரோனா வைரஸ்  தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த இந்த மாட்டுச் சந்தை கடந்த செப்டம்பர் 2 ந் தேதி  முதல் அரசின் பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளுடன் செயல்படத் தொடங்கியது. முதல் இரண்டு வாரம் மாடுகள் வரத்து என்பது  குறைவாகவே இருந்தது. மூன்றாவது வாரத்திலிருந்து மாடுகள் வரத்து தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் கடந்த நான்கு வாரக் காலமாக வெளிமாநில வியாபாரிகள் இங்கு வராததால் மாடுகள் விற்பனை மந்தமாக இருந்தது. இந்த நிலையில், இன்று 30 ந் தேதி கூடிய சந்தையில் மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. பசு மாடு 500, எருமைகள் 300, கன்றுக் குட்டிகள் 100 என மொத்தம் 900 மாடுகள் வந்தது.

 

மாடுகளைத் தென்மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும், ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநில வியாபாரிகளும் நேரில் வந்து அவர்களுக்குப் பிடித்த மாடுகளைத் தேர்வு செய்து வாங்கிச் சென்றனர். பசுமாடு ரூபாய் 30 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை விற்பனையானது. எருமை மாடு ரூபாய்.30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை விற்பனையானது. வளர்ப்புக் கன்றுக்குட்டி ரூபாய் 10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்கப்பட்டது.  இந்த வாரம் வரத்தான மாடுகள் 90 சதவீதம் விற்பனையானதாக மாட்டுச் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உஷாரய்யா உஷாரு... தொழிலதிபர்களை குறிவைக்கும் வெளிமாநில கும்பல்!

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

Foreign gangs exchange fake jewelry with businessman

 

தென்காசி மாவட்டத்தின் சிவகிரி நகரின் ரதவீதிப் பக்கம் பெரிய மளிகைக் கடை வைத்திருப்பவர் ஒருவரிடம் கடந்த ஒரு வாரமாக இரண்டு பேர் தொடர்ந்து நாணயமாக பொருட்கள் வாங்கிச் சென்றுள்ளனர்.

 

அந்த வகையில் சற்று பழக்கம் ஏற்பட்ட உடன் கடை அதிபரிடம் சைலண்ட்டாகப் பேச்சுக் கொடுத்த அந்த இருவரும், தாங்கள் அருகிலுள்ள ராஜபாளையம் பக்கமுள்ள செங்கல் சூளையில் தங்கியிருந்து வேலை பார்ப்பதாகவும், சூளை அருகே மண் தோண்டும் போது புதையல் கிடைத்ததாகவும் அதில் சுமார் ஒரு கிலோ அளவுள்ள தங்க நகைகள் கிடைத்ததாகவும் அதனை 5 லட்சத்திற்கு விற்க உள்ளதாகவும் சொன்னவர்கள் சாம்பிளாக ஒரு கிராம் தங்க நகையைக் கொடுத்துள்ளனர். அவர்களின் பேச்சு, உடல் மொழியில் சந்தேகப்பட்ட மளிகைக் கடை அதிபர் அவர்களிடம் பக்குவமாகப் பேசியவர் அவர்களை தன் உறவினர் தங்கராஜிடம் அனுப்பியுள்ளார்.

 

அவரிடமும் இவர்கள் அப்படியே சொல்ல சந்தேகப்பட்ட தங்கராஜ், ரகசியமாக அடுத்த அறைக்குச் சென்றவர் இது குறித்து சிவகிரி காவல் துறையினரிடம் விஷயத்தைத் தெரிவிக்க இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தனிப்படை எஸ்.ஐ.சஜூவ் உள்ளிட்ட போலீஸ் டீம் அந்த இருவரையும் வளைத்து தங்கள் லெவலில் விசாரித்திருக்கிறார்கள். விசாரணையில் அந்த இருவரும் குஜராத் மாநிலம் டக்கர் நகரைச் சேர்ந்த பிரபுலால் மகன் கிசன், (42) மற்றும் நாராயணன் மகன் சுனில் (42) என்பதும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டவைகள் போலியான நகைள் என்றும் மோசடிக்காகவே உருவாக்கப்பட்டதாகவும் தெரிய வந்திருக்கிறது.

 

குஜராத்திலிருந்து கும்பலாகக் கிளம்பிய இந்தக் கூட்டம் தென் மாவட்டத்தின் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ரயில்வே நிலையக் காட்டுப் பகுதிகளில் டெண்ட் போட்டுத் தங்கிக் கொள்வார்கள். பகலில் கம்பளி போர்வையும், கொசு வலையும் விற்க வந்ததாகக் காட்டிக் கொண்டு நகரிலுள்ள பெரிய தனவந்தர்கள், கடைக்காரர்களைக் குறிவைத்து இரண்டு மூன்று நாள் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு மெல்ல மெல்ல ஆசை வலையை விரிப்பார்கள். புதையல் நகை என்றும் மொத்தக் கொள்முதல், சல்லிசான விலை என்றும் இடத்திற்கு ஏற்றபடி பேச்சைப் போடுவார்கள்.

 

தங்க நகை என்று கூறிக் கொண்டு சல்லிசான விலை என ஒரு சில லட்சங்களை வாங்கிவிடும் இவர்கள் மறு நாள் அந்தப் பகுதியையே காலி செய்து விட்டு வேறு பகுதிக்கு நகர்ந்து விடுவார்கள். தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். இப்படி நகைகளுடன் வரும் இந்தக்கும்பலிடம் பலர் ஏமாந்துள்ளனர். இவர்களிடம் கைப்பற்றியதில் பிரிட்டிஷ் விக்டோரியா மகாராணி படம் பொறித்த போலி தங்க நாணயமும் உண்டு. வசதியான பெரிய இடம், ஏமாந்தது வெளியே தெரிந்தால் மானம் போகும் என்ற பயத்தில் பலர் வெளியே சொல்வதில்லையாம். அதன் விளைவு பெங்களூர், சென்னை கோவை என்று பெரிய நகரங்களில் பெரும் பணக்காரர்களே ஏமாந்துள்ளனர். தற்போது சிவகிரி மோசடியில் சிக்கியுள்ளனர், என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

 

 

Next Story

மருந்து பொருட்களின் ஆன்லைன் விற்பனையைத் தடை செய்திட வேண்டும்; வணிகர் மாநாட்டில் தீர்மானம்

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

erode fortieth traders association mega conference urge ban for  online medicine sale 

 

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே டெக்ஸ்வேலி மைதானத்தில் 40வது வணிகர் தினத்தை ஒட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் உரிமை முழக்க மாநாடு இன்று (05.05.2023) தொடங்கியது. மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

 

இன்று நடந்த 40வது வணிகர் உரிமை முழக்க மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு: உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி, அறநிலையத்துறை கடைகளுக்கான முன் தேதியிட்ட வாடகை விதிப்பு அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறும், 2007ஆம் ஆண்டு அரசு அறிவிப்பின்படி சந்தை, மதிப்பீட்டின் அடிப்படையில் வாடகை நிர்ணயித்திடவும் வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்று தற்போது உள்ள உரிமையாளர்களின் பெயரில் மாற்றம் செய்திட அரசு துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும். வணிக உரிமைகள் அனைத்தும் ஒரே இடத்தில் , ஒரே நேரத்தில் ஒற்றைச் சாளர முறையில் ஆயுள் உரிமமாக வழங்கிட வேண்டும். அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்திடும் முறையை அரசு அறிவித்திட வேண்டும் விதிமீறல் கட்டிடங்களுக்குக் கட்டிட வரைமுறை கால நீட்டிப்பு நகரமைப்பு சட்டங்களில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடப் பகுதிகளைக் கால இடைவெளி உடன் இளம் காணத் தமிழகம் முழுவதும் சட்டத் திருத்தம் வேண்டும்.

 

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்கும் வணிகர்களுக்கு அவர்கள் செலுத்தும் வரியின் அடிப்படையில் ஓய்வூதியமும், காப்பீடும், குடும்ப நல நிதியும், இயற்கை பேரிடர் மற்றும் தீ விபத்துகளால் பாதிக்கப்படும் காலங்களில் வணிகர்களுக்கும் , வணிக குடும்பங்களுக்கும் அரசே காப்பீடு செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் இழப்பீடுகள், வழங்கிடவும் வேண்டும்.ஜிஎஸ்டி வரி முறையில் செய்யப்பட்டு வரும் தினசரி மாறுதல் மற்றும் திருத்தங்கள் காரணமாகத் தொழில் வணிகத்துறை மிகுந்த குழப்பத்தில் பல்வேறு இனங்களைச் சந்தித்து வருகிறது. எளிய வரி என்கிற இலக்கை எட்ட மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை மறு சீராய்வு செய்து ஒரே நாடு ஒரே வரி என்ற பிரதமரின் கொள்கையை உறுதிப்படுத்திச் சரியான வரியை நிர்ணயம் செய்ய வேண்டும். சிறு குறு வணிகர்களும் எளிதாகக் கையாளும் விதமாகவும், வணிகர்களுக்கு எதிரான ஜிஎஸ்டி வரி குளறுபடியையும், முரண்பாடுகளையும் கலைந்திட வேண்டும். இதற்காக வணிகப் பிரதிநிதிகள் இணைந்து ஒரு உயர்மட்ட குழுவை அமைத்திடவும் பழைய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி ஒரே நிலையில் அதாவது 5 சதவீதம் மட்டுமே அமல்படுத்திடப் பேரமைப்பு வலியுறுத்துகிறது.

 

நடைமுறையில் உள்ள உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் உள்ள முரண்பாடுகளை உரிய ஆய்வுகளுடன் களைந்து, ஆயுள் உரிமமாக அறிவித்திடவும் சாலையோர கடைகளை முறைப்படுத்திடவும் அபராதம் மற்றும் தண்டனைச் சட்டங்களில் உரிய மாற்றங்களைச் செய்திடவும் வலியுறுத்தப்படுகிறது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு பெருகிடப் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடவும் உற்பத்தி சார் தொழில்களை ஊக்கிவிக்கவும் பெருநகரங்கள் நோக்கி பொதுமக்கள் புலம் பெயர்வதைத் தடுத்திடவும் தொழில் பூங்காக்கள் குறிப்பாகத் தென் மாவட்டங்களில் திருநெல்வேலி தூத்துக்குடி மதுரை, விருதுநகர் ராமநாதபுரம் மாவட்டங்களில் அமைத்திடத் தமிழரசு துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகளே அனுமதி வழங்கி அதற்கு முரண்பட்ட காரணங்களைச் சொல்லி முடக்கி வைக்கின்ற தொழில் நிறுவனங்களை மீண்டும் திறந்து வேலை வாய்ப்பை உருவாக்கி சமூக கட்டமைப்பைச் சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

உயிர்காக்கும் மருந்து பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதைக் கண்டிப்பாகத் தடுக்கப்பட வேண்டும். அந்நிய நேரடி முதலீட்டு ஆன்லைன் வர்த்தகத்தை முறைப்படுத்திட வேண்டும். ஜவுளித்துறை நூல் மூலப்பொருள் விலை ஏற்றம் கட்டுப்படுத்திட வரி குறைப்பு செய்திட வேண்டும். ஈரோடு பெருநகரின் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தோல் பதனிடும் தொழில் மற்றும் சாயக் கழிவுகள் சுத்திகரிக்கப்பட, ஒரு மைய சுத்திகரிப்பு நிலையம் உடனடியாக அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் வெளிப்புற சுற்று வட்டப் பாதை காவிரிக் கரையை ஒட்டி நெடுஞ்சாலை அமைத்து இதர மாவட்டங்களோடு போக்குவரத்தை இணைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகர் நல வாரியம் நல வாரிய உறுப்பினர்கள் நிர்வாகிகள் நியமத்தோடு முழுமை பெற்ற வாரியமாக வணிகர் நலன் காத்திடப் பேரமைப்பு வலியுறுத்துகிறது" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.