Skip to main content

சேலத்தில் வழிப்பறி கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது!

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

சேலம் பெரிய புதூர் போயர் தெருவைச் சேர்ந்தவர் சிவா. கடந்த நவ. 7ம் தேதியன்று, காட்டூர் ஆட்டோ நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 7 கிராம் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.


இதுகுறித்து சிவா, அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டவர் பெரிய புதூரைச் சேர்ந்த பழனி மகன் வேட்டையன் என்கிற முருகன் (26) என்பது தெரிய வந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

salem thief goondas act arrested police


ரவுடி வேட்டையன் என்கிற முருகன் மீது, நடப்பு ஆண்டில் கடந்த மார்ச் மாதம் அழகாபுரத்தைச் சேர்ந்த தனபால் என்பவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றதாக ஒரு வழக்கும், கடந்த ஆகஸ்ட் மாதம் பெருமாள் என்பவரிடம் கத்தி முனையில் 1200 ரூபாய் வழிப்பறி செய்த வழக்கும் பதிவாகி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.


தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதோடு, சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவித்து வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர், மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனிடம் நேரில் கைது ஆணையை சார்வு செய்தனர்.

 

சார்ந்த செய்திகள்