Skip to main content

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊரில் 'என்கவுண்டர்' ரவுடியின் உடல் தகனம்!

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

சேலத்தில் காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் உடல், பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊரில் உள்ள சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.

 

kathir


சேலத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் அருகே உள்ள தேவாங்கர் காலனியைச் சேர்ந்த சேட்டு மகன் கதிர்வேல். காட்டூரைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேசன் என்பவரை கொலை செய்த வழக்கில் கதிர்வேல் உள்ளிட்ட சிலரை காரிப்பட்டி காவல்துறையினர் தேடி வந்தனர். மே 1ம் தேதி இரவு அவரை கைது செய்த காவல்துறையினர், கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக மே 2ம் தேதி காலையில், குள்ளம்பட்டியில் உள்ள ஓர் ஆலமரத்தடிக்கு அழைத்துச்சென்றனர்.
 

அப்போது காவல்துறையினரை கத்தியால் தாக்க முயற்சித்த கதிர்வேலை, காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்ரமணி தனது கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அன்றே சடலம் உடற்கூறாய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், என்கவுண்டரில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார்கள் கிளப்ப, மறுநாளான மே 3ம் தேதி, சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு நடந்தது.
 

சேலம் மாவட்ட மூன்றாவது நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சரவணபவன் என்கவுண்டர் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தினார். அவர் முன்னிலையில், சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தலைவர் கோகுலரமணன், மருத்துவர் கார்த்திக் ஆகியோர் மேற்பார்வையில் பகல் 12.15 மணிக்கு தொடங்கிய உடற்கூறாய்வு பணிகள் மதியம் 2 மணிக்கு முடிந்தன. இவை அனைத்துமே வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது. உடற்கூறாய்வுக்குப் பின்னர் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

kathir

 

அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே சடலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி கதிர்வேல், சேலத்தை அடுத்த காட்டூரைச் சேர்ந்த திமுக பிரமுகரும் பிரபல ரவுடியுமான ஆனந்தன் என்பவருக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்தார். கதிர்வேலின் தம்பி பூபதி, பாமகவில் இருக்கிறார். அதனால் உள்ளூர்க்காரர்கள், கட்சிக்காரர்கள் ஏதேனும் கலாட்டா செய்யலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.
 

கதிர்வேலின் வீடு அருகில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் சுடுகாடு வரைக்கும் ஊர்வலமாக சென்றது. ஐந்நூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், உறவினர்கள் சுடுகாட்டுக்கு ஊர்வலமாக சென்றனர்.  
 

சுடுகாட்டில் கதிர்வேலின் சடலத்திற்கு அவருடைய தந்தை சேட்டு, தம்பி பூபதி ஆகியோர் இறுதி காரியங்களை செய்தனர். தம்பி பூபதி, கொள்ளி வைத்தார். இந்தக் காட்சிகள் அனைத்தையும், கியூ பிராஞ்ச், மாவட்ட தனிப்பிரிவு மற்றும் எஸ்பிசிஐடி காவல்துறையினர் கேமராவில் பதிவு செய்தனர். 
 

சுட்டுக்கொல்லப்பட்ட கதிர்வேலின் தந்தை சேட்டு மற்றும் உறவுக்காரர் ஒருவர் கூறுகையில், ''எல்லா பத்திரிகை, டிவிகளிலும் பிரபல ரவுடி என்று கதிர்வேலை குறிப்பிட்டு செய்தி போடுகின்றனர். அந்தளவுக்கு பிரபல ரவுடியாக இருந்து சொத்து சேர்த்து இருந்தால் இந்த ஒழுகும் வீட்டிலா குடியிருப்பான்? இந்நேரம் அடுக்குமாடி வீடு கட்டியிருக்க மாட்டானா?

 

kathir

 

கணேசன் கொலை வழக்கில் சரணடையப் போனவனை, அநியாயமாக சுட்டுக்கொன்றுவிட்டனர். அவன் வீட்டுக்கு வந்தே 20 நாளாச்சுங்க. மே 1ம் தேதி இரவுதான், அயோத்தியாப்பட்டணம் ரயில்வேகேட் அருகே காவல்துறையினர் டிபன் வாங்கி கொடுத்ததாகவும், டிபன் சாப்பிட்டதாகவும் போனில் சொன்னான். இதற்குமேல் புலம்பி என்ன ஆகப்போகிறது?'' என விரக்தியாக கூறினர்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.