Skip to main content

அமெரிக்காவில் இருந்து ரூ. 5 கோடி மதிப்பிலான கலிய மர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை மீட்பு!

Published on 06/09/2024 | Edited on 06/09/2024
Rs. 5 Crore Kaliya Marthana Krishna Metal Statue Recovery!

5 கோடி மதிப்பிலான கலிய மர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மூலமாக மீட்டு கொண்டுவரப்பட்டது.

தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவின் காவல் துறைத்தலைவர் இரா.தினகரனின் வழிகாட்டுதலின் படியும் காவல் கண்காணிப்பாளர் இரா.சிவக்குமாரின், மேற்பார்வையிலும் தனிப்படை அமைத்து, வெளிநாட்டு தனியார் கலைப் பொருட்கள் சேகரிப்பாளர்களால் நடத்தப்படும் அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் இணையதளங்களில், தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான ஏதேனும் சிலைகள் கடத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து இணையதளங்களை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தி தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் இணையதளங்களில் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, 2008 ம் வருடம் நவம்பர் மாதம் லூயிஸ் நிக்கல்சன் என்பவரால் பதிவேற்றம் செய்யப்பட்ட ‘Gold of the Gods’ என்ற ஒரு கட்டுரையைக் கண்டறிந்தனர். அதில் கலியகல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணர் (குழந்தை கிருஷ்ணர் காலிங்கன் எனப்படும் பாம்பின் மேல் நடனமாடும் நிலையில் உள்ள) உலோக சிலையின் புகைப்படத்தினை வளைத்தளத்தில் கண்டறிந்தனர். அதன் பின்னர், பல்வேறு இணையதளங்களில் மேற்காணும் சிலை குறித்த தகவல்களையும் தனிப்படையினர் சேகரிக்கத் தொடங்கினர். அப்போது, ‘Hold on your Hat: Antiquities dealer Douglas Latchford, a/k/a Pakpong Kriangsak’ என்ற பெயரில், ஒரு கட்டுரை 27.09.2019 அன்று ‘Association for Research Crimes Against Art’ (ARCA) என்ற இணையதளத்தில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டக்ளஸ் லாட்ச்ஃபோர்டு என்பவர் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். இவரை பற்றி நடத்திய விசாரணையில், கம்போடியா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இதர நாடுகளில் உள்ள தொன்மை வாய்ந்த சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை சேகரிக்கும் பழக்கம் உள்ளவர். மேலும், இவர் பன்னாட்டு கள்ளச்சந்தையில் விற்பது மற்றும் வாங்குவது போன்ற செயல்களை செய்துவருபவர் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், கலியகல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணரின் உலோக சிலை தற்சமயம் அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை என்ற அமைப்பின் கைவசம் இருப்பதையும் தனிப்படையினர் தெரிந்துகொண்டனர்.

Rs. 5 Crore Kaliya Marthana Krishna Metal Statue Recovery!

மேலும், 2020ஆம் ஆண்டு இறந்து போன டக்ளஸ் லாட்ச்ஃபோர்டு, இச்சிலையை சுபாஸ் சந்திர கபூரிடமிருந்து 2005 ம் ஆண்டு அமெரிக்க டாலர் மதிப்பில் 6,50,000 (இந்திய மதிப்பில் ரூ.5.2 கோடி) வாங்கியதும், நான்சி வைனர் என்ற சிலை மதிப்பீட்டாளர் சுபாஸ் சந்திர கபூருக்கு மேற்காணும் சிலை குறித்தான போலி ஆவணங்களை தயாரிப்பதற்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. உலோக சிலை குறித்தான தொடர் விசாரணையில், இச்சிலையானது தமிழ்நாட்டின் பிற்காலச் சோழர் காலமான 11-12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதும் தெரியவந்தது. இந்நிகழ்வுகளை குறித்து ஆராய்ந்தபோது, கலியகல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணரின் உலோக சிலை 2005 ம் ஆண்டிற்கு முன்னர் சுபாஸ் சந்திர கபூர் மற்றும் அவரது கூட்டாளிகளால் தமிழ்நாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டு, விற்கப்பட்டு இருந்திருக்கலாம் என்பது தெரியவந்தது. 

இச்சிலை எந்த கோவிலிலிருந்து திருடப்பட்டது என்பது குறித்தான விவரங்களை அறிந்திட தீவிர புலன்விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த தகவல்களின் அடிப்படையில், தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.  தமிழ்நாடு சிலைத் திருட்டு தடுப்பு பிரிவினரின் அயராத முயற்சியினாலும் மற்றும் சர்வதேச கூட்டு முயற்சியினாலும், இந்த சிலை அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை அமைப்பு (HIS) கைப்பற்றி பாங்காங் அரசிடம் 11.10.2023 ல் ஒப்படைத்தனர். அதன் பின்னர், பாங்காங்கில் உள்ள இந்திய உயர் ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாடு சிலைத் திருட்டு தடுப்பு பிரிவினர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய உள்துறை அமைச்சகம், இந்திய தொல்லியல் துறை ஆகியோர்களின் மூலம் தாய்லாந்து அரசாங்த்தினரால் 25.06.2024 ல் இந்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறுதியாக கடந்த 04.09.2024 அன்று தமிழ்நாடு சிலைத் திருட்டு தடுப்பு பிரிவு தனிக்குழுவினரிடம் இந்திய தொல்லியல் துறை மூலமாக பெறப்பட்டது. இந்த சிலையானது, கூடுதல் தலைமை நடுவர் நீதிமன்றம்கும்பகோணம் வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. மேலும் இந்த சிலை எந்த கோவிலைச் சேர்ந்தது என்பதை கண்டறிந்திட தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சார்ந்த செய்திகள்