![Rs 10,000 fined to Chidambaram Municipal Commissioner](http://image.nakkheeran.in/cdn/farfuture/mDZd5eHoljt9Wj4C90wM5qL9wMnchJRBRyPdQbc_fHI/1632159288/sites/default/files/inline-images/b1_10.jpg)
சிதம்பரத்தைச் சேர்ந்த சிபி சக்கரவர்த்தி கடந்த 2017-ஆம் ஆண்டு சிதம்பரம் நகராட்சியில் தகவல் அறியும் சட்டத்தின் படி சில தகவல்களைக் கேட்டுள்ளார். சிதம்பரம் நகராட்சி பொது தகவல் அலுவலர் இது நாள் வரை அவருக்குத் தகவலைத் தரவில்லை. தகவல் தராத காரணத்தால் அவர் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதனை விசாரித்த மாநிலத் தகவல் ஆணையர் முத்துராஜ், சிபி சக்கரவர்த்திக்குச் சிதம்பரம் நகராட்சி பொது அதிகார அமைப்பு (சிதம்பரம் நகராட்சி ஆணையர்) இந்நாள்வரை ஏன் தகவல் அளிக்கவில்லை. இதுவரை தகவல் அளிக்காததிற்கு மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரத்தைச் சிதம்பரம் நகராட்சி ஆணையர் கடிதம் கிடைக்கப்பெற்ற 15 தினத்திற்குள் காசோலையாக வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் ஊழலை மறைப்பதற்காக சில தகவலைத் தர மறுப்பதாக மனுதாரரின் கூற்றை ஆணையம் ஏற்றுக் கொண்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.