Skip to main content

மும்பை போலீசாருக்கு சவாலாக இருந்த ரவுடி தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் துப்பாக்கி முனையில் பிடிபட்டான்! 

Published on 11/03/2022 | Edited on 11/03/2022

 

 Rowdy, who was challenging the Mumbai police, Tamil Nadu-Karnataka border!

 

மும்பை காவல்துறையினரிடம் சில ஆண்டுகளாக பிடிபடாமல் தண்ணீ காட்டி வந்த ரவுடி, தமிழ்நாடு & கர்நாடகா எல்லைக்கு உட்பட்ட தனியார் விடுதியில் பதுங்கியிருந்தபோது துப்பாக்கி முனையில் காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

 

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ஆசிப் என்கிற இலியாஸ். இவர் மீது அந்த மாநிலத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் கொள்ளை, கொலை, ஆள்கடத்தல், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட 45- க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் காவல்துறையினரிடம் பிடிபடாமல் ஆசிப் என்கிற இலியாஸ் தொடர்ந்து போக்குக் காட்டி வந்துள்ளான்.  

 

இந்த நிலையில், கர்நாடகா - தமிழ்நாடு எல்லைப் பகுதிக்கு உட்பட்ட அத்திப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தலைமறைவாக இருப்பது குறித்து மும்பை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அவனுக்கு ஸ்கெட்ச் போட்ட மும்பை காவல்துறை, அவன் பதுங்கியிருக்கும் இடம் குறித்து கர்நாடகா மாநில காவல்துறைக்கு தகவல் அளித்தது. அதன்பேரில் கர்நாடகா மாநில காவல்துறை தனிப்படையினர், ஆசிப் பதுங்கி இருந்த தனியார் விடுதியை சுற்றி வளைத்தனர். 

 

அவன் அறைக்குள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். ஆனால் அந்த அறையின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்ததால், விடுதி நிர்வாகத்திடம் இருந்து மாற்று சாவியைப் பெற்ற காவல்துறையினர், அதன்மூலம் அறையைத் திறந்து உள்ளே சென்றனர். அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஆசிபை துப்பாக்கி முனையில் பிடித்து கைது செய்தனர். 

 

அவனிடம் இருந்து கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், பத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள், 20- க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். முகம் தெரியாத பல நபர்களின் ஆதார் நகல்களைக் கொடுத்து சிம் கார்டுகளைப் பெற்றிருப்பது தெரிய வந்தது.

 

அவனை அத்திப்பள்ளி காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அவன் பிடிபட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த மும்பை காவ்துறையினர் அத்திப்பள்ளி விரைந்தனர். அவர்களிடம் ஆசிபை, கர்நாடகா காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

 

மும்பை காவல்துறைக்கு சவாலாக விளங்கிய ரவுடி, தமிழக மற்றும் கர்நாடகா எல்லைப்பகுதியில் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.