![Red Alert for Chennai; Increase in water opening in Puzhal Lake](http://image.nakkheeran.in/cdn/farfuture/j-zqjrS5bC0c_Fk9NmInp3FHJmdgUqX9ABwHshXVCEs/1668139948/sites/default/files/inline-images/n21978.jpg)
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுவடைய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி நோக்கி வரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தொடர் கனமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியிலிருந்து நீர் திறப்பு காலை 10.30 மணி முதல் 100 கன அடியில் இருந்து 500 கன அடியாக உயர்த்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 500 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால் புழல் ஏரிக்கரையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.