![Reconstruction work of less privileged police stations in Trichy!](http://image.nakkheeran.in/cdn/farfuture/BRnF2GA2jYvqhOQ02QFR1xfhNxbonSGB7fdH4j0572g/1642487622/sites/default/files/inline-images/th_1628.jpg)
திருச்சி மாநகரின் காவல் துறை எல்லையானது வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வசதி குறைவான காவல் நிலையங்களை மாற்றி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
அதில், திருச்சி மாநகரில் முதன்மை அமர்வு காவல் நிலையத்திற்குப் புதிய காவல் நிலைய கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கோட்டை காவல் நிலையத்திற்கும் புதிய காவல் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் தற்போது மாநகராட்சியானது 65 வார்டுகளில் இருந்து 100 என மாற்றி அமைக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், மாநகராட்சியின் எல்லைகள் விரிவுபடுத்தப்படுவதால் கூடுதலாக உடுமலையில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே தற்போது மாநகரில் 7 ஆய்வாளர்கள் பணியிடத்திற்கு ஒப்புதல் கோரியும் இதற்காக கூடுதலாக உள்ள உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களைத் திரும்ப ஒப்படைக்கவும் தமிழக டி.ஜி.பி.க்கு திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கருத்துரு அனுப்பியுள்ளார்.
தற்போது வடக்கு, தெற்கு எனப் பிரிக்கப்பட்டு இரண்டு துணை ஆணையர்கள் கீழ் 14 உதவி ஆணையர்கள், 40 ஆய்வாளர்கள், 60 உதவி ஆய்வாளர்கள் என 1,800 காவல்துறையினர் தற்போது பணியில் உள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மாநகர காவல் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் தற்போது பணியில் உள்ள உதவி ஆய்வாளர்கள் பணியிடம் ஒப்படைக்கப்பட்டு புதிதாக ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும் என்று கூறி ஒரு விரிவான கருத்துரு தயாரித்து அனுப்பப்பட்டுள்ள நிலையில், புதிய ஆய்வாளர்களை அமர்த்த விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.