Skip to main content

“நீண்ட காலமாக தொடரும் இந்த அநீதியை சரி செய்ய வேண்டும்..” - விமானநிலையம் பெயர் குறித்து ராமதாஸ் வேதனை! 

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

Ramaodss statement about Chennai airport name issue

 

“சென்னை விமான நிலையங்களின் முனையங்களுக்கு காமராசர், அண்ணா ஆகியோரின் பெயர்களை சூட்டுவது விமான நிலையத்தின் அடையாளத்துடன் சம்பந்தப்பட்டது ஆகும். கட்டுமானப் பணிகளை காரணம் காட்டி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக முனையங்களின் பெயர்களை அழித்து விட்டு விமான நிலையத்தை இயக்குவது எந்த வகையிலும் முறையல்ல. எனவே,  சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசரின் பெயரும், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணாவின் பெயரும் மீண்டும் சூட்டப்படுவதை விமான நிலையங்கள் ஆணையம் விழா நடத்தி அறிவிக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கு சூட்டப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா ஆகியோர் பெயர்களும், பெயர் பலகைகளும் அகற்றப்பட்டு பத்தாண்டுகள் ஆகப்போகும் நிலையில், அவற்றை மீண்டும் அமைப்பதற்கு விமான நிலையங்கள் ஆணையம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் உணர்வு சார்ந்த விஷயத்தில் இந்த அளவுக்கு தாமதமும், அலட்சியமும் காட்டப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.


மத்தியில் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சி நடைபெற்ற போது, 1989-90 ஆம் ஆண்டில் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசரின் பெயரும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணாவின் பெயரும் சூட்டப்பட்டன. அதன் பின்னர் சென்னை விமான நிலையத்திற்கு இந்த பெயர்களே அடையாளமாக மாறியிருந்த நிலையில், விமான நிலைய நவீனமயமாக்கல் பணியின் போது, ஏற்கனவே இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டதால், அவற்றில் இருந்த பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன. 2013-ஆம் ஆண்டில் நவீனமயமாக்கப்பட்ட விமான நிலைய முனையங்கள் திறக்கப்பட்ட போது, அவற்றுக்கு மீண்டும் இந்த பெயர்கள் சூட்டப்படவில்லை. அவை சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம், பன்னாட்டு முனையம் என்றே அழைக்கப்பட்டன.


உள்நாட்டு முனையத்தின் பழையக் கட்டிடத்தின் மீது காமராஜர் உள்நாட்டு முனையம் என்ற பெயர் பலகை இருந்தது. ஆனால், அதுவும் கடந்த 2020-ஆம் ஆண்டில் தகர்க்கப்பட்டு விட்டது. அதன்பின்னர்  சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசரின் பெயரும், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணாவின் பெயரும் நீடிப்பதற்கு எந்த சாட்சியமும் இல்லை. சென்னை விமான நிலையத்தின் இணையதளத்தில் மட்டுமே உள்நாட்டு முனையத்திற்கு காமராசரின் பெயரும், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணாவின் பெயரும் சூட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


விமான நிலையத்திலும், விமானங்களிலும் செய்யப்படும் அறிவிப்புகளில் சென்னை உள்நாட்டு விமான நிலையம், சென்னை பன்னாட்டு விமான நிலையம் என்றே பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. விமான பயணச்சீட்டுகளிலும் காமராசர், அண்ணா ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்படுவதில்லை. நீண்ட காலமாக தொடரும் இந்த அநீதியை சரி செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பான்மையான கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும் எந்த பயனும்  ஏற்படவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சென்னை விமான நிலையத்தின் விரிவாக்க மற்றும் நவீனமயமாக்கல் பணிகளுக்கும், தலைவர்களின்  பெயருக்கும் எந்த தொடர்பும் இல்லை. சென்னை விமான நிலையப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்பது உண்மை தான். ஆனால், அனைத்துப் பணிகளும் முடிவடைந்த பிறகு தான் தலைவர்களின் பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. விமான நிலையங்கள் ஆணையம் நினைத்தால் சென்னை விமான நிலையத்தின் நுழைவாயிலில் காமராசர் உள்நாட்டு முனையம், அண்ணா பன்னாட்டு முனையம் என்று பெயர் பலகை அமைக்க முடியும். அதேபோல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையக் கட்டிடங்கள் மீதும் இத்தகைய பெயர் பலகைகளை பொறுத்த முடியும். அது தான் முறையாகும்.


சென்னை விமான நிலையங்களின் முனையங்களுக்கு காமராசர், அண்ணா ஆகியோரின் பெயர்களை சூட்டுவது விமான நிலையத்தின் அடையாளத்துடன் சம்பந்தப்பட்டது ஆகும். கட்டுமானப் பணிகளை காரணம் காட்டி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக முனையங்களின் பெயர்களை அழித்து விட்டு விமான நிலையத்தை இயக்குவது எந்த வகையிலும் முறையல்ல. எனவே,  சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசரின் பெயரும், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணாவின் பெயரும் மீண்டும் சூட்டப்படுவதை விமான நிலையங்கள் ஆணையம் விழா நடத்தி அறிவிக்க வேண்டும்.


விமான நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் காமராசர், அண்ணா ஆகியோரின் பெயர் பொறித்த பெயர் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். விமான பயணச் சீட்டுகளிலும் காமராசர் உள்நாட்டு விமான நிலையம், அண்ணா பன்னாட்டு விமான நிலையம் என்று பெயர்கள் அச்சிடப்பட வேண்டும். இவை அனைத்தும் உடனே நடைமுறைக்கு வருவதை விமான நிலையங்கள் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.