![Rain water entered the VAO office](http://image.nakkheeran.in/cdn/farfuture/QuTMt0vg1XQMvVmgLCD9RP5IT-60B64tNZc4V8RRlFs/1668228333/sites/default/files/inline-images/n21938.jpg)
காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்து வருகிறது. சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பூந்தமல்லி அருகே உள்ள வரதராஜபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் வரதராஜபுரம் விஏஓ அலுவலகத்துக்குள் அலுவலகப் பணிக்காக மக்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சென்னை மந்தைவெளி ஆர்.கே.மடம் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சாலையில் தேங்கி இருக்கும் மழை நீர் அகற்றப்படாததால் மண்ணரிப்பு ஏற்பட்டு இதுபோன்ற பள்ளங்கள் ஏற்படுவது சென்னையில் வாடிக்கையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.