Skip to main content

தேர்தல் நடத்தை விதியால் ரயில் பயணிகள் திணறல்!

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

‘வாகன காப்பகம் தற்காலிகமாக இயங்கவில்லை. இங்கு நிறுத்தும் வாகனங்களுக்கு இரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்காது.’ என மதுரை ரயில்வே மேற்கு நுழைவு வாயில் வாகன காப்பகச் சுவரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதே ரயில்வே வளாகத்தில், ‘இரண்டு சக்கர வாகன திருடர்கள் ஜாக்கிரதை’ என அறிவிப்பு பலகை ஒன்றைத் தொங்கவிட்டுள்ளது காவல்துறை.  ஆனாலும், திருட்டு போனால் போகட்டும் என்றோ, அப்படி எதுவும் நடக்காது என்ற அசட்டுத் துணிச்சலினாலோ,  ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களை அங்கே நிறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள், மதுரையிலிருந்து தினமும் வெளியூருக்குச் சென்று திரும்பும் ரயில் பயணிகள்.  

 

madurai

 

அந்த வாகன காப்பகத்தில் நிறுத்தியிருந்த தனது டூ வீலரை, இட நெருக்கடியின் காரணமாக வெகு சிரமப்பட்டு வெளியில் எடுத்துக் கிளம்பிக்கொண்டிருந்த சங்கர்குமார் நம்மிடம் “இங்கு நிறுத்தும் டூ வீலர் திருடுபோனால், காணாமல் போனால், நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என்று பொறுப்பில்லாமல் கூறுகிறது ரயில்வே நிர்வாகம். இரண்டு சக்கர வாகன திருடர்கள் ஜாக்கிரதை என்று அறிவிப்பு வெளியிட்டு, திருடர்களை சுதந்திரமாக திருடவிட்டு வேடிக்கை பார்க்கிறது காவல்துறை.

 

madurai

 

மத்தியிலும், மாநிலத்திலும் அரசு நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதற்கு இதைவிடவா சான்று வேண்டும்? கட்டணம் பெற்றுக்கொண்டு பாதுகாப்பு தருவதற்காகத்தானே வாகன காப்பகம் கட்டிவிட்டிருக்கின்றனர்? மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வாகன காப்பகம் தொடர்ந்து இயங்குவதற்கான நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டிருக்க வேண்டாமா? ஒப்பந்தகாரர் இல்லையென்பதால், டோக்கன் வாங்காமல்,  வேறு வழியின்றி இங்கே வாகனத்தை நிறுத்திவிட்டுப் போகிறோம். வெளியூர் வேலைக்குப் போகும் எங்களால் நிம்மதியாக வேலை பார்க்க முடியாது. வாகனம் நிறுத்திய இடத்தில் இருக்குமா? திருடு போயிருக்குமா? என்ற மன உளைச்சல் திரும்பவந்து வாகனத்தைக் கண்ணில் பார்க்கும் வரை பாடாய்ப்படுத்தும்” என்றார் ஆதங்கத்துடன்.

 

madurai


இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட வர்த்தக மேலாளர் செல்வராஜை தொடர்புகொண்டு கேட்டபோது “வாகன காப்பகத்தின் ஒப்பந்த காலம் முடிந்துவிட்டது. டென்டர் போட்டு எல்லாம் ரெடியாக இருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் காரணமாக டென்டரை அவார்ட் பண்ணாமல் நிறுத்தி வைத்திருக்கிறோம். விதிகளின்படி பழைய ஒப்பந்தத்தையும் நீடிக்க முடியாது. பயணிகள் நலன் கருதி விதிகளை மீறி செயல்பட்டால், எங்களுக்கு சம்மன் வரும். தேர்தல் முடிவுகள் வெளியாகி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் நாளிலேயே,  ஒப்பந்தம் உடனடியாக நடைமுறைக்கு வந்து,  வாகன காப்பகம் இயங்க ஆரம்பித்துவிடும்.” என்றார். 
 

“லஞ்சம் வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும் பலரும் வாங்குகின்றனர். சுயநலம் என்றால் சட்டத்தை மீறுகின்றனர். பொதுநலன் என்றால் அதே சட்டத்தைக் காரணம் காட்டி தப்பித்துக்கொள்வர். மக்களைக் காக்க வேண்டிய சட்டமும் விதிமுறைகளும் பொதுநலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாமா? திருடர்களுக்குத் துணை போகலாமா?” என்று சினந்தார் சங்கர்குமார். சட்டம் என்ற இருட்டறையில் பாமரனின் பார்வைக்கும் கேள்விக்கும்  ‘வெளிச்சம்’ தேட முடியாது!

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்கத் தயாரான மக்கள்; ரயில்வேயின் திடீர் அறிவிப்பால் அவதி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Suffering from the sudden announcement of the railway for assam People ready to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Suffering from the sudden announcement of the railway for assam People ready to vote

இதற்கிடையில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக அஸ்ஸாமுக்கு மற்றும் அங்கிருந்து செல்லும் பல ரயில்களை ரத்துசெய்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அஸ்ஸாமின் 5 தொகுதிகளில் இன்று (26-04-24) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், நேற்று (25-04-24) லும்டிங் பிரிவில் உள்ள ஜதிங்கா லம்பூர் மற்றும் நியூ ஹரங்காஜாவோ நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்ட சம்பவத்தின் காரணமாக பல ரயில்களின் நேரத்தை மாற்றியமைத்து ரத்து செய்ததாக வடகிழக்கு எல்லை ரயில்வே அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தமாக பிற மாநிலங்களுக்கு சென்று வாழும் அஸ்ஸாமிய மக்கள் இன்று ஓட்டு போடுவதற்காக தங்கள் சொந்த மாநிலமான அஸ்ஸாம் நோக்கி வர வார இறுதி விடுமுறையில் கிளம்ப இருந்த நேரத்தில் நேற்று (25-04-24) மாலை திடீரென்று அஸ்ஸாம் செல்லும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரயில்வேயின் இந்த திடீர் அறிவிப்பால், பொதுமக்கள் பலரும் அவதியடைந்து வருகின்றனர். இதுபோன்ற முக்கியமான நாளில் வாக்காளர்கள், வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் முயற்சியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த அறிவிப்புக்கு பின்னால் பா.ஜ.க.வின் சதி இருப்பதாகவும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.