Skip to main content

ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி விசாரணை!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018
Rto Of tvm


திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குள் ஜீலை 11ந்தேதி மாலை 4.20 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையின் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணகுமார், காவல் ஆய்வாளர்கள் ரஜினிகாந்த், அருள்பிரசாத் என 12 பேர் கொண்ட குழு புகுந்துள்ளது.

அப்போது அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன், மண்டல வட்டார போக்குவரத்து கழகத்தின் விழுப்புரத்தை சேர்ந்த பறக்கும்படை அதிகாரி துரைசாமி இருந்துள்ளார் மற்றும் ஊழியர்கள் இருந்துள்ளனர்.
 

RTO Car


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி வாகனங்கள் வாரந்தோறும் புதன்கிழமை ஆய்வு நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று ஆய்வு நடைபெற்றுள்ளது. அதில் பெருமளவில் லஞ்சம் விளையாடியுள்ளது. அதேப்போல் அலுவலகம் முழுவதுமே புரோக்கர்கள் ராஜ்ஜியம் கொடிக்கட்டி பறந்துள்ளது. இதனை லுங்கி கட்டிக்கொண்டு லாரி டிரைவர் போல் லஞ்ச ஒழிப்புத்துறையை சேர்ந்த ஒருவர் வந்து உட்கார்ந்து நோட்டமிட்டு மேலிடத்துக்கு தகவல் தந்துள்ளார்.

 

 

அதன்பின்பே அதிகாரிகள் ரெய்டு என உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த லாரிகள், அலுவலகத்தின் பின்புறம், பாத்ரூம் என எல்லா இடத்திலும் சோதனை செய்தபோது, பறக்கும்படை ஆர்.டீ.ஓ துரைசாமி காரில் இருந்து 50 ஆயிரம் ரூபாயும், அலுவலகத்தில் இருந்து 25 ஆயிரம் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். அந்த பணத்துக்கான விளக்கத்தை நீண்ட நேரம் கேட்டுள்ளனர்.
  chees bag


அதோடு, அதிகாரிகளுக்கு புரோக்கர்களாக செயல்படும் சில தனியார் ஓட்டுநர் பயிற்சி மைய உரிமையாளர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இரவு 9 மணியளவில் வழக்கு பதிவு செய்து, பறிமுதல் செய்த பணத்தை நீதிமன்றம் மூலம் அரசுக்கணக்கில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின இளைஞருக்கு அனுமதி மறுப்பு; கோவிலுக்கு சீல் வைத்த ஆர்டிஓ

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

karur veeranam patti kaliamman temple sealed incident 

 

கோவிலில் பட்டியலின இளைஞரை உள்ளே விட மறுத்த விவகாரத்தில் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

கரூர் மாவட்டம் கடவூர் அருகே வீரணம்பட்டியில் வீரணம்பட்டி, கரிச்சபட்டி, கொள்ளுதண்ணிப்பட்டி, சரக்கம்பட்டி, மாலப்பட்டி, கீழ ஆணை கவுண்டம்பட்டி, வீரகவுண்டம்பட்டி ஆகிய எட்டு ஊர்களுக்கு பொதுவான ஸ்ரீ காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தற்போது வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது.  திருவிழாவில் அதே ஊரைச் சேர்ந்த பட்டியலின இளைஞரை கோவிலில் நுழைய குறிப்பிட்ட சமூகத்தினர் அனுமதி மறுத்துள்ளனர்.

 

இதனால் அங்கு நேற்று முன்தினம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நேற்றும் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவி தலைமையிலான வருவாய்த்துறையினர், குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையிலான காவல்துறையினர் ஆகியோர் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

ஆனால் குறிப்பிட்ட சமூகத்தினர், கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து வருவாய்த் துறையினர் கோவிலின் கதவினை இழுத்துப் பூட்டி சீல் வைத்தனர். இதனால் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்டிஓ வின் காரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்ட சம்பவம் வீரணம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

 

 

Next Story

ஆக்கிரமிப்புகள் அகற்றம்; எச்சரிக்கை விடுத்த ஆர்டிஓ

Published on 11/05/2023 | Edited on 11/05/2023
encroachment constructed building destroyed karur kulithalai bus stand

 

பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் ஆர்டிஓ முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டன.

 

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள நகர பேருந்து நிலையம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது. இந்த இடத்திற்கு நகராட்சி நிர்வாகம் தரை வாடகை கொடுத்து நடத்தி வருகிறது. இந்த பேருந்து நிலையம் 1.22 ஏக்கரில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள் போட்டி போட்டுக் கொண்டு உருவெடுத்தன. இதனால் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்து செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.

 

இதனால் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்காக அரசு  74  லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து 1.22 ஏக்கர் நிலத்தை பல கட்டங்களாக அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்தை சுற்றி ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அதிக அளவில் உள்ளதால் விரிவாக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள்  முடிவு செய்தனர்.

 

பல கட்ட முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், குளித்தலை ஆர்டிஓ புஷ்பா தேவி தலைமையில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி, நகராட்சி ஆணையர் மனோகர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, நகராட்சி ஆகியவை இணைந்து பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்து  கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடங்கள் முதல் சிறிய வீடுகள் வரை உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் இடித்து தரைமட்டமாக்கினர்.

 

அப்பொழுது பொதுமக்களுக்கு ஆர்டிஓ புஷ்பா தேவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பல முறை எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் சட்டப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் இது சம்பந்தமாக ஏதாவது பிரச்சனையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.