Skip to main content

மதுரை பாண்டி கோவில் வளாகத்தில் பூசாரி கொடூரமாக வெட்டிக் கொலை! 

Published on 10/10/2020 | Edited on 10/10/2020

 

Priest attacked Madurai Pandi temple premises

 

மதுரையில் மிகவும் பிரபலமான கோவிலாக பாண்டி கோவில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இந்த கோவிலில் துணை பூசாரியாக மதுரையை அடுத்த ஆண்டார் கொட்டாரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் முத்துராஜா என்பவர் இருந்துள்ளார்.

 

இவர் இன்று (10ஆம் தேதி) மதியம் 3 மணி அளவில் கோவில் அருகே இருந்தபோது வாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியது. உடனடியாக தகவல் அறிந்து வந்த அண்ணாநகர் காவல்துறையினர் மற்றும் காவல்துறை இணை ஆணையர் சிவபிரசாத், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

 

பின் போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களையும் சேகரித்துள்ளனர்.
 

மேலும், அங்கு ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை எடுத்து கொலையாளி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில், ஒரு வருடத்திற்கு முன்பு காதுகுத்து விழாவில் முத்துராஜாவுக்கும்  கருப்பாயூரணியைச் சேர்ந்த ஒரு கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அதற்கு பழிக்குப்பழியாக இது நடந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை என்பதால், வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்