Skip to main content

பிரபு எம்.எல்.ஏ. திருமணம் செய்த பெண்ணும் அவரது தந்தையும் நேரில் ஆஜராக வேண்டும்! –உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 08/10/2020 | Edited on 08/10/2020

 

Prabhu MLA The married woman and her father must appear! - High Court order!

 

 

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபு திருமணம் செய்துகொண்ட பெண்ணும், அவரது தந்தையும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவும், தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள் சௌந்தர்யாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருச்செங்கோடு கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் சௌந்தர்யாவின் காதலை பெற்றோர் ஏற்காத நிலையில், அக்டோபர் 1-ஆம் தேதி திடீரென மாயமாகியுள்ளார். இந்நிலையில்,  பிரபு - சௌந்தர்யா திருமணம் முடிந்ததாக, அவர்களின் புகைப்படமும், சௌந்தர்யா வீட்டில் மறுத்ததால் வீட்டைவிட்டு வெளியேறி தன்னை முழுமனதுடன் திருமணம் செய்துகொண்டதாக பிரபுவும் வீடியோ வெளியிட்டார்.

 

அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவும், அவரது தந்தையும் சேர்ந்துதான், தன் மகளை கடத்தியிருப்பதாகவும், அவர்களிடமிருந்து மகளை மீட்டு, கடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி,  சாமிநாதன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை வாங்க மறுத்த காவல்துறை,  சாமிநாதனை பொது இடத்தில் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவால் கடத்தப்பட்டதாகவும், மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், படிக்கும் பெண்ணிடம் எம்.எல்.ஏ. பிரபு, ஆசை வார்த்தைகளைக் கூறி,  ஏமாற்றி கடத்திவிட்டதாக தெரிவித்துள்ளார். 

 

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென சுவாமிநாதன் தரப்பில் நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் முறையிடப்பட்டது. வழக்கை பட்டியலிடும்படி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால், இன்று வழக்கு விசாரணைக்கு வராததால், மீண்டும் முறையிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள்,  நாளை சம்பந்தப்பட்ட பெண்ணையும் அவரது தந்தையையும் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்