![Pollution Control Board orders transfer of pollution control officer ..!](http://image.nakkheeran.in/cdn/farfuture/95LI1bSCEwQKO9sMdXKUV3sxKk4KfFlAwbkMtCgza_U/1613566907/sites/default/files/inline-images/th_630.jpg)
ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக செந்தில் விநாயகம் என்பவர் இருந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் உள்ள சாயக் சலவை ஆலைகள், காலிங்கராயன் வாய்க்காலில் நேரடியாக பைப்புகள் அமைத்து கழிவுநீரை வெளியிடுவதாகப் புகார்கள் வந்தன.
இதையடுத்து மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சிவசுப்பிரமணியம் மற்றும் காலிங்கராயன் பாசன சபை விவசாயிகள் ஒன்றிணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 30 ஆலைகளின் கழிவுநீர், காலிங்கராயன் வாய்க்காலில் கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த 30 ஆலைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆனால், சீல் வைத்ததை மீறி ஒரு சில ஆலைகளை மட்டும் மீண்டும் இயங்குவதற்கு முயற்சிகள் நடத்தப்பட்டன.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காலிங்கராயன் பாசன விவசாயச் சங்கத்தினர் ஈரோடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயத்தில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகத்தை, திடீரென ராமநாதபுரம் மாவட்டத்திற்குப் பணியிடமாற்றம் செய்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. மேலும், பெருந்துறை மாசுக்கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் உதயகுமார், கூடுதல் பொறுப்பாக ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.