![Pity what happened to the young man who played the drum](http://image.nakkheeran.in/cdn/farfuture/wycIwQ1QKGOD8ISiSlILKmjTXS_JXp9ynaiPbPC1g1E/1730896714/sites/default/files/inline-images/5_226.jpg)
விருத்தாசலம் அருகே உள்ள கோ.பவளங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மகன் ஆகாஷ்(18). இவர் மேளம் அடிக்கும் இசைக்கலைஞராக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம்(4.11.2024) அதே பகுதியில் வசிக்கும் அம்சாயாள் என்ற மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதனையொட்டி அவரது இறப்பிற்கு ஆகாஷ் மேளம் அடிக்கச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் இறப்பிற்கு மேளம் அடித்துக் கொண்டிருந்த போது அங்கு சிலர் நாட்டுச் சணல் வெடிகுண்டை வெடித்தனர். அப்போது அதில் ஒரு வெடி மேளம் அடித்துக்கொண்டிருந்த ஆகாஷின் தலையின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. அதில் ஒரு விரல் துண்டானதோடு ஆகாஷின் தலை படுகாயமடைந்தது. அவருடன் சேர்ந்து அங்கிருந்த இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கப்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஆகாஷை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.