Skip to main content

சிதம்பரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை வெட்டி பணப்பையை பறித்த குற்றவாளிகள் கைது

Published on 27/12/2018 | Edited on 27/12/2018
p

 

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே பால்வாத்துண்ணான் கிராமத்தை சேர்ந்த  சிவசங்கர் ( 30). இவர் புதுச்சத்திரத்தில் உள்ள பெட்ரோல் ‘பங்க்’கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

 

இவர்  புதன் இரவு வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் வேலையில் ஈடுபட்டு இருந்தார். இதன் மூலம் வசூலான பணத்தை பையில் வைத்திருந்தார். இரவு 9.15 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் சிவசங்கரிடம் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறினர்.

 

p

 

அதன்பேரில் சிவசங்கரும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் டேங்கில் முழுமையாக பெட்ரோல் நிரப்பினார். இதையடுத்து பணம் கேட்டதற்கு, அவர்கள் 3 பேரும் பணம் இல்லை என்று கூறி, அவர் வைத்திருந்த பணப்பையை பறித்தனர். ஆனால் சிவசங்கர் பணப்பையை விடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென சிவசங்கரை தலையில் சரமாரியாக வெட்டினர். இதை தடுத்த அவரது கையை வெட்டிவிட்டு அவரிடம் இருந்த பணப்பையை பறித்த 3 பேரும், மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்று விட்டனர்.
 

இதற்கிடையில் பலத்த காயமடைந்த சிவசங்கரை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

p


இதனைறிந்து அதிர்ச்சி அடைந்த மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சரவணன் உத்திரவின் பேரில்  சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மற்றும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு  செய்து இரவு முழுவதும் தேடி வந்தனர். இதனிடையே குற்றவாளிகள் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர் என்ற கிராமத்தில் தங்கியிருப்பதை அறிந்த காவல்துறையினர் குற்றவாளிகளை இரவோடு இரவாக கைது செய்துள்ளனர்.

 

காவல்துறையினர் விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் நாவல்குளம் பகுதியை சேர்ந்த மணி(எ) குரு(24), புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் தேவா(23) என்று தெரியவந்துள்ளது. இதில் முக்கிய குற்றவாளி கரிக்கலாம்பாக்கம் சுரேஷ் தப்பியுள்ளார். இவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் கத்தி, இருசக்கரவாகனம், பணப்பை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் இரவில் இதுபோன்று சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வழிபறி உள்ளிட்ட குற்றசம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. மேலும் அதே இரவில் சிதம்பரம் புறவழிச்சாலையில் லாரியின் உரிமையாளரை கத்தியால் தலையில் வெட்டிவிட்டு லாரியின் கண்ணாடிகளை உடைத்து அவரிடம் இருந்த தங்கசங்கிலி, பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Petrol, diesel price reduction

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாளை (15.03.2024) காலை 06:00 மணி முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூலம் 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக சரக்கு வாகனங்கள், 6 கோடி கார்கள் மற்றும் 27 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 102 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 94 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பை அடுத்து சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 92 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

முன்னதாக உலக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பெட்ரோல் ஊற்றிக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த நபரால் பரபரப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
 person who entered the collector's office pouring petrol caused a commotion

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சாமுண்டீஸ்வரி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் சாமுண்டீஸ்வரிக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் இருவருக்கான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் தான் தனது மனைவியை தன்னிடம் இருந்து பிரித்து விட்டதாக கூறி பலமுறை சதீஷ்குமார், ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புகார் மீது எவ்விதமான நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பெட்ரோல் கேனை மறைத்துக் கொண்டு வந்த சதீஷ்குமார் திடீரென்று பொதுமக்கள் முன்னிலையில் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு துப்பாக்கி வடிவில் இருந்த லைட்டரைக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்ட மனு அளிக்க வந்த பெண்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர்.

உடனடியாக விரைந்து வந்த போலீசார் சதீஷ்குமாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.