



கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணவாளநல்லூரில் மணிமுக்தா ஆற்றில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். மணல் குவாரி அமைக்க கூடாது என்று அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மணல் குவாரி அமைக்கும் பணியை பார்ப்பதற்கு மணவாளநல்லூர் வழியாக மணிமுக்தாற்றுக்கு அதிகாரிகள் செல்லும் போது அவர்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர். பின்னர் மணல் குவாரி அமைத்தால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி விடும் என்றும், தமக்கு சோறு போடும் ஆற்றை கூறு போட விட மாட்டோம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் ஆற்றிலேயே வாழை இலையில் சோறு போட்டு மண் சோறு சாப்பிட்டு தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இதனால் மணல் குவாரி அமைக்க சென்ற அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர். இந்த வித்தியாசமான போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.