![People Who Depicted woman Photos Instagram](http://image.nakkheeran.in/cdn/farfuture/4nG_d3SA9ju1cD6jJsaYPHP-8yVUstKnUEAhYFGTV4Q/1674890947/sites/default/files/inline-images/Untitled-1_379.jpg)
டிஜிட்டல் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமாக பயன்படுகிறதோ அதே அளவுக்கு சமூகத்திற்குத் தீங்கான அம்சமாகவும் உள்ளது. கிட்டத்தட்ட இரண்டுபுறம் கூரிய கத்தி போலதான் இத்தைகய தொழில்நுட்பங்கள் உள்ளன. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், வாட்ஸ்ஆப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் படங்கள், தனிப்பட்ட விவரங்களை வைத்துக்கொண்டு மிரட்டும் கும்பலும் அவ்வப்போது காவல்துறை வசம் சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. குறிப்பாக பெண்கள், சமூக ஊடகங்களில் தங்களின் தனிப்பட்ட விவரங்கள், படங்களை பகிர வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவர் பதிவிட்ட குடும்பப் புகைப்படம் ஒன்றை, மர்ம நபர்கள் ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்துள்ள சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.
அதன் விவரம்..
சேலம் அழகாபுரம் பெரியபுதூரைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர், அம்மாபேட்டை மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், ''நான் என் குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தேன். அதை மர்ம நபர்கள் திருடி, ஆபாச வர்ணனைகளுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். அந்தப் படங்களை என் உறவினர்களுக்கும் அனுப்பி உள்ளனர். இதனால் என் குடும்பத்தினரும் நானும் மன உளைச்சல் அடைந்துள்ளோம். இந்த செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறியிருந்தார். காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.