Skip to main content

தேனி மாவட்டத்தில் 4 ஆயிரத்தைக் கடந்த கரோனா தொற்று! பீதியில் பொதுமக்கள்!!

Published on 27/07/2020 | Edited on 28/07/2020

 

Over 4,000 corona infections in Theni district

 

தேனி மாவட்டத்தில் நேற்று புதிதாக 234 பேருக்கு கரோனா உறுதியானதால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணி க்கை 4,007 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நேற்று முன் தினம் வரை 3,194 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று தேனி நகர அ.தி.மு.க. செயலாளர் மற்றும் பழனி செட்டிபட்டி பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர், சின்னமனூர் சேர்ந்த வங்கிக் கிளை மேலாளர், பெரியகுளம் கிளை சிறைச்சாலையில் பணியாற்றும் தலைமைக் காவலர் அதோடு இரண்டு சிறைக் காவலர்கள் மற்றும் அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர், பெரியகுளம் தென்கரையிலுள்ள துணை முதல்வர் ஓ.பி.எஸ்சின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ஆயுதப்படை போலீஸ், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் 2 அலுவலகப் பணியாளர்கள், ஒரு செவிலியர் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன்மூலம் 234 பேருக்கு கரோனா தோற்று நேற்று புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,007 ஆக உயர்ந்துள்ளது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உசிலம்பட்டி அருகே உள்ள போத்துபட்டியைச் சேர்ந்த 55 வயது பெண், ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியைச் சேர்ந்த 60 வயது ஆண் என இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். சின்னமனூர் சேர்ந்த 60 வயது ஆண், உத்தம பாளையத்தைச் சேர்ந்த 50 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவரும் முன்பே உயிரிழந்தனர். இதனையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. இதில் பத்து பேர் பரிசோதனை முடிவுகள் வெளிவரும் முன்பே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி நாளுக்கு நாள் தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கண்டு பொதுமக்களும் பீதி  அடைந்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்