விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த ஆண்டு பணி மாறுதலில் வந்தவர் ராதாகிருஷ்ணன். பொதுமக்களிடமும் சக காவல்துறையினரிடமும் சுமுகமான முறையில் நடந்து கொள்பவர். அப்படிப்பட்ட இவர் திடீரென மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக ஸ்ரீ நாதா என்பவர் புதிய கண்காணிப்பாளராக பணி மாறுதலில் விழுப்புரம் வந்து நேற்று பணியையும் ஏற்றுக் கொண்டார்.
அப்போது அவர் கூறும்போது, “தமிழக அரசின் உத்தரவை முழுமையான அளவில் நிறைவேற்றப்படும். அதிலும் கரோனா கட்டுப்படுத்தும் பணிக்கு முன்னுரிமை அளித்துச் செயல்படுத்தப்படும். சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும். மணல் கடத்தல் உட்படக் குற்றச் சம்பவங்கள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை உண்டு" என்று அறிவித்துள்ளார்.
இவர் பதவியேற்ற உடனேயே, சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 50 காவலர்களை பணியிடமாற்றம் செய்ய ஏற்கனவே பதவியிலிருந்த ராதாகிருஷ்ணன் வெளியிட்டிருந்த உத்தரவை ரத்து செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்திற்குள் பல்வேறு மாநிலங்களிலிருந்து கஞ்சா, மது பாட்டில்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தினசரி கடத்தப்பட்டு வருகிறது. புதிய காவல் கண்காணிப்பாளர் அந்த கடத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? என எதிர்பார்க்கிறார்கள் மாவட்ட மக்கள்.