கோடைகால வெயில் தமிழகத்தில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இன்னும் சில நாட்களுக்கு தமிழகத்தில் வெப்ப அலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலை கருத்தில் கொண்டு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் நற்பணி மன்றங்கள் சார்பாக பொதுஇடங்களில் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள இடங்களில் மக்களின் தாகம் தீர்ப்பதற்காகவும் கோடை வெயிலை தாக்குப்பிடிப்பதற்காகவும் நீர் மோர் பந்தல்களை அமைக்க வேண்டும் என அறிவித்திருந்தார். அவரின் உத்தரவுபடி பல்வேறு இடங்களில் அதிமுகவினர் நீர் மோர் பந்தல்களைத் திறந்து வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதற்காக தள்ளு வண்டிகளில் பழங்களும், ஐஸ் மற்றும் நீர் மோர் கொண்டுவரப்பட்டது. திடீரென அந்தப் பகுதிக்கு படையெடுத்த மக்கள் வண்டிகளில் இருந்த தர்பூசணி, ஆரஞ்சு, மாம்பழம் என அனைத்து பழங்களையும் பெரிய பெரிய அட்டை பெட்டிகள் மற்றும் பைகளில் போட்டிப் போட்டுக் கொண்டு எடுத்துச் சென்றனர். இதனால் நீர் மோர் பந்தல் ஐந்து நிமிடத்திலேயே காலியானது. இதனை வீடியோவாக பதிவு செய்த சில இளைஞர்கள் 'சாப்பிட எடுத்துட்டு போறீங்களா இல்ல விக்குறதுக்கா?" எனக் கேட்கும் அளவிற்கு பெட்டி பெட்டியாக அப்பகுதி மக்கள் பழங்களை எடுத்துச் சென்ற நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது.