Skip to main content

எப்படி இருந்தது நீட் தேர்வு? மாணவ, மாணவிகள் சொல்வது என்ன?

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

neet exam experience students says

 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவது அவசியம். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (12.09.2021) நடைபெற்றது. 

 

இந்தியா முழுவதும் 16.14 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் மட்டும் 1.10 லட்சம் பேரும் இத்தேர்வை எழுதினர். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடந்தது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 28 மையங்களில் 15,067 பேர் தேர்வு எழுதினர். 

 

இந்த ஆண்டு மொத்தம் 200 வினாக்கள் கொடுக்கப்பட்டு, அவற்றில் 180 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. நீட் தேர்வு எப்படி இருந்தது என்பது குறித்து சேலம் சக்தி கைலாஷ் கல்லூரி மையத்தில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளிடம் பேசினோம். 

 

தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த மாணவி ரக்ஷிதா, தனியார் பள்ளியில் படித்துவந்தவர். முதன்முறையாக நீட் தேர்வை எழுதியுள்ளார். அவர் கூறுகையில், ''உயிரியல், தாவரவியல் பாடப்பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் ரொம்பவே எளிமையாக இருந்தன. வேதியியல் பகுதிக்கான வினாக்கள் ஓரளவு பரவாயில்லை என்று சொல்லலாம். 

 

ஆனால், இயற்பியல் பகுதி வினாக்கள் மிக கடினமாக இருந்தன. இயற்பியல் சம்பந்தப்பட்ட வினாக்கள் நீள நீளமாக கேட்கப்பட்டிருந்தன. கேள்வியைப் படித்து உள்வாங்கிக் கொள்ளவே பத்து நிமிடங்கள் தேவைப்பட்டது,'' என்றார்.

 

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பரத்குமார் என்ற மாணவர், அங்குள்ள அரசு மாதிரி பள்ளியில் படித்துவந்தவர். முதல்முறையாக நீட் தேர்வை எதிர்கொண்டுள்ள அவர் கூறுகையில், ''எங்கள் பள்ளியில் ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தினர். கரோனா ஊரடங்கின்போது ஆன்லைன் மூலம் பயிற்சி அளித்தனர். பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டது, இத்தேர்வை எதிர்கொள்ள உதவியாக இருந்தது. இந்த தேர்வில் இயற்பியல் பகுதி மட்டும் கடினமாக இருந்தது. சில வினாக்கள் டிவிஸ்ட் செய்து கேட்டிருந்தனர்,'' என்றார். 

 

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரைச் சேர்ந்த ஷாலினி, அரசுப் பள்ளியில் படித்தவர். முதன்முறையாக இத்தேர்வை எழுதியுள்ளார். அவர் கூறும்போது, ''இயற்பியல் பாடப்பகுதியில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் சில, கணக்கீடு அடிப்படையில்  இருந்ததால் கொஞ்சம் சவாலாக இருந்தது. சில வினாக்கள் குழப்பும் வகையிலும் இருந்தன. மற்ற பாடப்பகுதி வினாக்கள் ஓரளவு எளிமையாக இருந்தன. 

 

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவ, மாணவிகளுக்கு இந்த நீட் தேர்வு எளிமையாக இருக்கும். எங்களைப் போன்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக பாடங்களைக் கொண்டு வந்தால், எதிர்காலத்தில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களும் அதிகளவில் இத்தேர்வில் வெற்றி பெற வாய்ப்புள்ளது,'' என்றார்.

 

சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம், தனியார் பள்ளி மாணவர். முதன்முறையாக நீட் தேர்வை எழுதியுள்ளார். அவர் கூறுகையில், ''இயற்பியல் பகுதி வினாக்கள் மிகக்கடினமாக இருந்தன. வேதியியல் பிரிவு ஓரளவு பரவாயில்லை. உயிரியல் பகுதி வினாக்கள் எளிமையாக இருந்தன. இந்த வினாத்தாள் அடிப்படையில் பார்த்தால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இத்தேர்வு கடினமாகத்தான் இருந்திருக்கும்,'' என்றார்.  

 

தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்பது குறிப்பிட்ட பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து நடத்தப்படாமல், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் வினாத்தாள் வடிவமைப்பு இருக்க வேண்டும் என்கிறார்கள் பெற்றோர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.