திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த திருநாராயணபுரத்திலுள்ள காவிரி ஆற்றங்கரையில் காட்டு பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் காட்டுபட்டூர் போலீசார் ஆண் சடலம் ஒன்றை கண்டுபிடித்தனர். மேலும் இது தொடர்பாக நடத்திய விசாரணையில்

அரசலூரை சேர்ந்த விமல் என்பவர் அவரது நண்பர்களுடன் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது. அவரிடம் இந்த கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அங்கு தீயில் கருகி இறந்துகிடந்தவர் நாமக்கல் மாவட்டம் கொவசம்பட்டி கணபதி நகரை சேர்ந்த லோடு ஆட்டோ ஓட்டுநர் சதிஷ் என்பதும் அவரை அவரது நண்பர்களே பெட்ரோல் ஊற்றிக்கொன்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.

சம்பவத்தன்று விமல் கொசவம்பட்டியை சேர்ந்த வசந்த், ராஜேஷ்குமார், சிவசங்கரன் மற்றும் கொலைசெய்யப்பட்ட சதிஷ் ஆகியோரோடு மது அருந்தியிருக்கிறார். பிறகு மது போதையில் அருகிலுள்ள ஆற்றங்கரையில் இருட்டிய நேரம் என்பதால் உடையின்றி குளிக்கத்தொடங்கினர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் சதீஸ் தனது மொபைலில் சக நண்பர்கள் ஆடையின்றி குளிப்பதை புகைப்படம் எடுத்து வாட்ஸாப்பில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனைக்கண்ட சக நண்பர்கள் சதீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். முற்றிய வாக்குவாதம் கைகலப்பில் முடிய ஆத்திரம் அடைந்த விமல், வசந்த், ராஜேஷ்குமார், சிவசங்கரன் ஆகியோர் சதீஷை சரமாரியாக அடித்து கத்தியால் குத்தி கொலைசெய்து 7 கிலோமீட்டர் தூரம் பைக்கில் சடலத்தை எடுத்துச்சென்று திருநாராயணபுரம் அருகே உள்ள ஒரு புதரில் வீசியெரிந்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டனர்.
இதுதொடர்பாக அந்த நாள்வரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விளையாட்டு வினையானதுக்கு இது ஒரு சான்று என்று அந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.