Skip to main content

‘அம்மா என்பது அழகு’ ‘மம்மி என்பது உயிரற்ற சடலம்’ : நல்லக்கண்ணு பேச்சு

Published on 04/10/2018 | Edited on 04/10/2018
nallakkannu



ஏழை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் உருவாக்கப்பட்ட அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கொத்தமங்கலத்தில் நடந்த கலை விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேசினார்.
 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்றம் சார்பில் கலை விழா, நூல் வெளியீடு, கல்வியாளர்கள், சமூக சேவகர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு சிவானந்தம் தலைமையில் முன்னால் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் சிவலிங்கம் முன்னிலையில் நடந்தது. தங்கராசு வரவேற்றார். 
 

விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கலந்து கொண்டு கவிஞர் துரைமாணிக்கம் எழுதிய புத்தகத்தை வெளியிட்டு விருது பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக சேவகர்கள், பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பேசினார். 
 

நல்லக்கண்ணு பேசியதாவது, ஒருவர் வயது முதிர்ந்துவிட்டாலே அவர்களை காணாமல் செல்லும் இந்த காலத்தில் ஆலங்குடி கணேசன் 5154 சடலங்களை தூக்கி சுமந்திருக்கிறார் என்றும், மற்றொருவர் டாக்டர் ராமதாஸ் ஆதரவற்றவர்களின் சடலங்களை சொந்த முயற்சியில் அடக்கம் செய்து வருகிறார் என்பதை கேட்டு அவர்களுக்கு நான் கொடுத்த நினைவு பரிசு என்பது மிகவும் உயர்ந்த பரிசாக நினைக்கிறேன். இது பொன்றவர்கள் இன்னும் இந்த நாட்டுக்கு தேவை. 
 

தமிழக அரசு ஆயிரத்திற்கு மேற்பட்ட அரசுப் பள்ளிகளை மூட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மாணவர்கள் குறைவாக உள்ளார்கள் என்றால் கல்வியை தரமாக்கி அவர்களுக்கு அளிக்க வேண்டும். ஏழை மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக காமராஜர் கிராமங்கள் தோறும் பள்ளிக் கூடங்களைத் திறந்தார். அதை நாம் மூடுவது நல்லதல்ல. அதனால் அரசு பள்ளிகளை மூடுவதை விட தரமான கல்வி கொடுக்கம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
 

பெற்றோர்களும் அம்மா என்று அழைப்பதை விட மம்மி என்று அழைப்பதை வரவேற்று தங்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். ‘அம்மா என்பது அழகு’  ‘மம்மி என்பது உயிரற்ற சடலம்’ என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். தாய்மொழிக் கல்வி தான் சிறந்தது என்று பேசினார்.
 

தொடர்ந்து கவிஞர் புத்திரசிகாமணி தலைமையில் கவியரங்கம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் சாமி.சத்தியமூர்த்தி, திராவிடச் செல்வம் (பொறுப்பு) மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் செல்வராசு நன்றி கூறினார்.



 

சார்ந்த செய்திகள்